டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி எதிரொலி.. தடுப்பு நடவடிக்கையில் இறங்கிய தாய்மார்கள்
திருநெல்வேலி: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை ஒன்று பலியானதால் பெண்கள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு பரவி வருகிறது. மேலும், அப்பகுதியில் கழிவு நீர் வடிகால் சுத்தப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இதிலிருந்து நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து சுகாதார துறையினருக்கு தெரியப்படுத்தியும் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆண்டிப்பட்டி மணிராஜ் என்பவரது 6 மாத குழந்தை பவினுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தை ஆலங்குளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் ரத்த அணுக்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக குழந்தை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலை குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குழந்தை இறந்ததால் அப்போது மட்டும் தலை காட்டிய சுகாதார துறையினர் அதன் பிறகு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் உடனடியாக சென்று விட்டனர் என குற்றம் சாட்டினர். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமானால் ந்நிலையில், தங்கள் குழந்தைகளை காக்க வேண்டிய பெண்கள் சுற்று புறத்தை தாங்களாகவே சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர்.