சென்னையில் பரவும் டெங்கு... சுகாதாரநிலையங்களில் நிலவேம்பு கசாயம்!
சென்னை: சென்னை நகரில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் கொசுக்கள் உற்பத்தி பெருகி வருகின்றன. இதனால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சுகாதாரமையங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'ஏடீஸ்' என்ற கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனை சரியாக கவனிக்கவில்லை என்றால் உயிர் இழப்பையும் ஏற்படுத்தி விடும். காய்ச்சல் வந்தாலே டாக்டரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஷிலானி என்ற 8 வயது சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிர் இழந்தார். இதனால் சென்னைவாசிகளிடையே டெங்கு காய்ச்சல் பீதி அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மேலும் இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் ஆனந்தம் நகர், அரவிந்தர் தெருவைச் சேர்ந்தவர் ரமா (40). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நடராஜன் (40). இவர்கள் இருவரும் ஒரு வாரமாக காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரின் ரத்த மாதிரியை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னையில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையும் அனைத்து முன் எச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமலும், கழிவு பொருட்களை அப்புறப்படுத்தவும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்திரைகள்
டெங்கு காய்ச்சல் நோய் பாதித்தவர்களின் வீடுகளின் அருகில் உள்ளவர்களுக்கு மருந்து - மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கொசு உற்பத்தியை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமும் ஆய்வு
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எந்தெந்த பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை தினமும் ஆய்வு செய்யப்படுகிறது. அந்த பகுதியில் கவனம் செலுத்தி கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கையும், சிகிச்சை அளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நிலவேம்பு கசாயம்
வைரஸ் காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மூலிகையான நிலவேம்பு கசாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இதனை காய்ச்சல் பாதித்தவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை வைரஸ் கிருமி தாக்காமல் இருக்க உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குடிக்கலாம்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
சென்னையில் 140 ஆரம்ப சுகாதார நிலையஙக்ளில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை குடித்தால் டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாமல் சாதாரண வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.