சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலி; பீதியில் சென்னைவாசிகள்
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழையால் தொற்றுநோய்கள் பரவிவருவது சென்னைவாசிகளை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
டெங்குவிற்கு பலியான சிறுமியின் பெயர் ஷிவாணி என்பதாகும். இவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்குமார், கற்பகம் தம்பதியின் மகளாவார். வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார் ஷிவாணி. கடந்த சில வாரங்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஷிவாணியை பெற்றோர் கடந்த மாதம் 28ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமையன்று காலை 8.25 மணிக்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதற்கான சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியது.
மாநகராட்சி சான்றிதழ்
முன்னதாக ஷிவானியின் ரத்த மாதிரி பிரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு நேற்று மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதில், ஷிவாணிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அதனை உறுதி செய்து மாநகராட்சியும், இறப்பு அறிக்கை அளித்தது. இதையடுத்து ஷிவாணியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி சடங்கு நேற்று மாலையில் நடந்தது.
மக்கள் பீதி
இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி இறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், மாநகராட்சி நிர்வாகம், அவர் டெங்கு காய்ச்சலால் இறந்தார் என இறப்பு அறிக்கையும் கொடுத்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. சென்னை நகரில் டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவி வருவதாக மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் புகார்கள் தெரிவித்தன. அதற்கு, மாநகராட்சி நிர்வாகம் அதுபோன்று நோய்கள் பரவவில்லை. தற்போது அநியாயமாக ஒரு மாணவி டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்.
மழையால் பரவும் நோய்கள்
கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் கழிவுநீரில் மழைநீர் தேங்கி வருகிறது. மழையின் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சளி தொடர்பான நோயாளிகள் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளனர். காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்து உள் மற்றும் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொசுத்தொல்லை
தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரின் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் மீண்டும் சென்னையில் பரவத் தொடங்கி உள்ளது. இது பொதுமக்களிடம் பீதியை கிளப்பி உள்ளது.
மாநகராட்சி பராமரிக்கவில்லை
சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட கால்வாய்களை முறையாக தூர்வாரி, பராமரிக்காததாலும் குடியிருப்பு பகுதி மற்றும் தெருக்களில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பல்வேறு தொற்று நோய் பாதிப்பில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பன்றிக்காய்ச்சல்
சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஹைகோர்ட் காலனியை சேர்ந்த கெஜலட்சுமி (40) கடந்த மாதம் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கை
இதனிடையே சென்னையில் டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கொசு ஒழிப்புப் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறுமி இறந்த பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு பலி எத்தனை
தமிழகத்தில் ஆண்டுதோறும் 23 சதவீதம் பேர் முதன்முறையாக டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஆண்டு தோறும் 2.28 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறப்பு வார்டுகள்
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டது. அந்த வார்டில் ஒவ்வொரு படுக்கைக் கும் கொசுவலை கட்டப்பட்டது. ஆனால் தற்போது டெங்கு காய்ச் சலுக்கு கொசு வலைகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்படவில்லை.
பாதிப்பு குறைந்துள்ளதாம்
கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைந்துள்ளது. 2012ம் ஆண்டு 13,204 பேரும், 2013ம் ஆண்டு 6,122 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பாதிப்பு
சென்னையில் கடந்த 2013ம் ஆண்டு 133 பேரும், 2014ம் ஆண்டு 137 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.