டெங்கு உஷார்: திருப்பூர், திருவண்ணாமலையில் வைரஸ் காய்ச்சலுக்கு 5 பேர் பலி
திருப்பூர்: திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சலால் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒருபுறம் பீதி பரவி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
மழைக்காலம் வந்தாலே கூடவே மழை தொடர்பான நோய்களும் மக்களை அச்சுறுத்த ஆரம்பித்து விடும். பன்றிக்காய்ச்சல் ஏராளமானோரை பலி வாங்கிய நிலையில் இப்போது வைரஸ்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலையில் மரணம்
திருவண்ணாமலை அருகே பூதமங்கலம் கிராமத்தில் இருவர், சேலம் ஓமலூர் அருகே தாராபுரம் கிராமத்தில் ஒரு வயது குழந்தை ஆகியோர் காய்ச்சலால் பாதிக்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
திருச்சியில் பாதிப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5க்கும் அதிகமான கிராமங்களில் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்ன வகை காய்ச்சல் பரவுகிறது என்பது தெரிவிக்கப்படாததால் நோய்வாய்ப்பட்டோர் உரிய சிகிச்சை பெறமுடியாமல் சிரப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மறைக்கும் அரசு
திடீரென பலருக்குக் காய்ச்சல் ஏற்படும் போது அது என்ன வகை காய்ச்சல், எதனால் ஏற்படுகிறது, காய்ச்சல் பரவுவதைத் தடுக்க என்னென்ன சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற விவரங்கள் என்பது அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவதில்லை என்பது பொதுமக்களின் புகாராக உள்ளது.
திருப்பூரில் பாதிப்பு
வைரஸ் காய்ச்சல் என்று மட்டும் கூறுவதால் உரிய சிகிச்சை பெற முடியாமல் குழப்பமடைவதாக தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். இதேபோல திருப்பூரில் காய்ச்சலால் சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் 60 வார்டுகளிலும் நோய்த் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என திருப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
காய்ச்சலை தடுப்பார்களா?
இதனிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் எதனால் பரவுகிறது என்பதைக் கண்டறித்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதுடன், அதனை வெளிப்படையாக அறிவிக்கவும் வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கிருஷ்ணகிரியில் பரவும் டெங்கு
கிருஷ்ணகிரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பீதி எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே அக்கொண்டபள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த விபுல்பிரம்மாவிற்கு கடந்த 4ம் தேதி முதலே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று பேருக்கு டெங்கு
இதே போல ஜெகதேவி பகுதியை அடுத்து உள்ள தண்ணீர் பள்ளம் கிராமத்தில் இயங்கிவரும் கிரானைட் கம்பெனியில் வேலை செய்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பலிந்தர் மற்றும் புச்சின் ஆகிய இரு இளைஞர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரின் ரத்த மாதிரிகளை சோதித்தபோது அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
தடுப்பது எப்படி
இந்தியாவில் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரையில்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. சுத்தமான மழைநீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய் மூடி, வீணடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், திறந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தொட்டி களில்தான் இவற்றின் இனப்பெருக்கம் நடக்கும் என்பதால் நம்முடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.
கொசுக்களிடம் எச்சரிக்கை
டெங்குவை பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் நான்கு வாரங்கள் வாழக்கூடியவை. அதிகாலை நேரம், மாலை 4 மணி முதல் 7 மணி வரைதான் இந்த வகை கொசுக்கள் அதிக அளவில் உலா வரும. எனவே ஏடீஸ் கொசு வரும் நேரத்தில் அலார்டா இருங்க மக்களே என்று எச்சரிக்கின்றனர் அதிகாரிகள்.