நெல்லையில் மீண்டும் பரவுகிறது டெங்கு… வெளிமாவட்ட சுகாதார பணியாளர்களுக்கு திடீர் அழைப்பு
திருநெல்வேலி: நெல்லை பகுதியில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கி வருவதால் வெளிமாவட்டத்தில் இருந்து சுகாதார பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 2012ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவியது. இதில் 35 குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் பலியானார்கள். தொடர்ந்து சீசன் காலங்களில் இந்த காய்ச்சல் பரவி பொதுமக்களை பீதி அடைய வைத்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து டெங்கு கட்டுக்குள் வந்தது. தற்போது டெங்கு மீண்டும் தலை தூக்கியுள்ளது.
குறிப்பாக கடையநல்லூர், புளியங்குடி பகுதியில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டும் இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனையில் 22 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த வெளி மாவட்டத்தில் இருந்து சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்கள் நெல்லை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.