வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. 28 பேர் மருத்துவமனையில் அனுமதி.. பீதியில் மக்கள்
நெல்லையில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை அருகே டெங்கு பரவி வருவதால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நவநீதிகிருஷ்ணபுரத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷாலினி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனைத் தொடர்ந்து பூசைத்தாய் என்பவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். மேலும் அதே பகுதியை சேர்ந்த மாணவர் முகேஷ்குமார், நத்தினி, ரம்யா, சஞ்சய் உள்ளிட்ட 8 பேரும், சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு அடுத்தப்படியாக சங்கரன்கோவிலில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக காணப்படுகிறது. இந்தக் காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலியாகி இருக்கும் நிலையில் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.