நகைக்காக பெண் டாக்டர் கழுத்தை நெரித்துக் கொலை... சென்னை கிளினிக்கில் பயங்கரம்!
சென்னை: சென்னையில் நகைக்காக பெண் டாக்டர் ஒருவர் கிளினிக்கில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் அருகே உள்ள நொளம்பூர், வெள்ளாளர் தெருவை சேர்ந்த சங்கரின் மனைவி சங்கீதா (32). பல் டாக்டரான சங்கீதா, சென்னை சிர் சரோ கிளினிக் என்ற பெயரில் நொளம்பூரில் கிளினிக் நடத்தி வந்தார். இத்தம்பதிக்கு 2 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
வழக்கமாக, சங்கர் வேலைக்கு சென்றதும் சங்கீதா தனது கிளினிக்கிற்கு சென்றுவிடுவார். பின்னர், மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, மாலை 5 மணியளவில் மீண்டும் கிளினிக் சென்று விடுவாராம்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல கிளினிக்கிற்கு சென்ற சங்கீதா மதியம் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சங்கர், உறவுக்கார நபர் மூலம் சங்கீதாவின் கிளினிக்கிற்கு நேரில் சென்று பார்த்து வரச் சொல்லியுள்ளார்.
அதன்படி, நேரில் சென்ற உறவினர், சங்கீதா தனது இருக்கையில் அமர்ந்தபடியே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தார் உதவியுடன் சங்கீதாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார்.
உடனடியாக இது தொடர்பாக நொளம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது சங்கீதா அணிந்திருந்த 12.5 பவுன் தாலிச் சங்கிலி திருடு போனது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், கிளினிக்கிற்கு வந்த மர்ம நபர், நகைக்கு ஆசைப்பட்டு சங்கீதாவை துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் ஏதாவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நோயாளி போல வந்த யாரேனும் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேதிக்கின்றனர். ஆயுதம் எதையும் கொலையாளி பயன்படுத்தவில்லை. மாறாக துப்பட்டாவை மட்டுமே பயன்படுத்தி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.