4 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பினார் மாயமான சென்னை மாடல் நடிகை! போலீசார் தீவிர விசாரணை
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை மாயமான மாடல் நடிகை கானம் நாயர் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை: சென்னையில் விளம்பரப் படங்களில் நடித்து வந்த மாடல் கானம் நாயர் காணாமல் போன நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் கானம் நாயர், விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் புகைப்பட கலைஞராகவும் கானம் செயல்பட்டு வந்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அழகுக்கலை நிலையத்திலும் கானம் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 26ந் தேதி தனது கருப்பு நிற ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கீழ்ப்பாக்கத்திற்கு சென்றவர் மாயமாகியுள்ளார்.
3 நாட்களாக காணவில்லை
அன்றைய தினம் அவர் அழகுக்கலை நிலையத்திற்கும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் கானத்தின் செல்போனும் அன்றைய தினமே ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் அவரை கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.
போலீசில்
இந்நிலையில் சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் இளம் பெண் கானம் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள்
காணாமல் போன கானம் நாயரின் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இது குறித்து எந்தத் தகவலும கிடைக்கவில்லை. இதனால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்று வழி
இதனிடையே கானம் நாயர் வழக்கமாக தான் அலுவலகம் செல்லும் பாதையில் போகாமல் காணாமல் போன தினத்தன்று வேறு பாதையில் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. 28 வயது இளம்பெண் காணாமல் போய் 3 நாட்கள் ஆன நிலையில் அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லாததால் அவரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வீடு திரும்பினார்
இதனையடுத்து போலீசாரிடம் தொலைபேசியில் பேசிய கானம் நாயர் தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிற்பகலில் தனது இல்லத்திற்கு வந்த கானம் நாயர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளளனர். கானம் நாயர் 4 நாட்களாக எங்கே சென்றார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.