நமது எண்ணமே நமது வாழ்வு- சன் டிவி புகழ் தேவகோட்டை இராமநாதன் பேச்சு!
நமது எண்ணமே நமது வாழ்வு என்ற தலைப்பில் சன் டிவி புகழ் தேவகோட்டை இராமநாதன் பேசியுள்ளார்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், சன் டிவி அசத்தப்போவது யாரு புகழ் தேவகோட்டை இராமநாதன் 7.02.2017 அன்று மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா வரவேற்றார். பொற்கிழிக் கவிஞர் நாகப்பன் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்டத்தின் சிறப்பு, காரைக்குடியின் தொன்மை, பாரம்பரியம், நகரத்தாரின் கலாச்சாரம் மற்றும் பெருமை பற்றி மாணவர்களுக்கு கூறினார்.
தமிழ் மொழியின் சிறப்பு, திருக்குறளின் சிறப்பு, உலக அளவில் தமிழ் மொழிக்கு கிடைத்திருக்கும் அங்கிகாரம் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினார். கர்ம வீரர் காமராஜர் அவர்கள் கல்விக்கு ஆற்றிய பணிகள், தன்னலம் பாராமல் பொதுநலன் ஒன்றே தன் வாழ்வில் நோக்கமாகக் கொண்ட விவேகானந்தர் பற்றியும் , தன் உயர்விற்கும், வளர்ச்சிக்கும் தன் ஆசிரியர்கள் தான் என்று கூறிய டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றியும், வாய்மையையே மக்கள் வாழ்வின் நடைமுறையாக்க வேண்டும் என்று கூறிய மகாத்மா காந்தியடிகள் பற்றியும் விளக்கி கூறினார்.
அவர் மாணவர்கள் மனதில் என்று நினைவில் இருக்கும்படியும், மாணவர்களை கவரும் வகையிலும், நகைச்சுவையோடும், சங்க இலக்கியப்பாடல்கள் வழியாகவும் உரையாற்றியது மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் உழைப்பின் மூலம் அடையலாம் என்பதை நமது வாழ்வின் இலட்சியமாக கொள்ளவேண்டும் என்றும், நமது எண்ணமே நமது வாழ்வாக அமையும் என்பதால் மாணவர்கள் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அழகு ஆபத்தானது என்பதை கிளி- காகம் கதை மூலம் விளக்கினார். மேலும் அவர் தனது உரையில் பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் நேர்த்தியான உடை, அவர்கள் நிகழ்ச்சியில் அமர்த்திருந்த பாங்கு பற்றி பெருமையுடன் பேசினார்.
மாணவர்கள் அவரின் உரையை மிகவும் ஆர்வத்துடன் ரசித்தனர். பட்டதாரி ஆசிரியர் கோமதிஜெயம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் விஜயலெட்சுமி மற்றும் கோமதி ஆகியோர் செய்திருந்தார்கள்.