ஆடிப் பெருக்கு, குருப் பெயர்ச்சி, ஆடி அமாவாசை.. எல்லாம் ஒரே நாளில்.. பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!
சென்னை: இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு, அமாவாசை, குருப் பெயர்ச்சி ஆகியவை ஒரே நாளில் வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதாவும் உத்தரவிட்டுள்ளதால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான கூட்டம் அலைமோதும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது. அந்த நாளில் தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அந்த நாளில் நீர் நிலைகள் தோறும் மக்கள் கூட்டம் குடும்பம் குடும்பமாக அலை மோதுவார்கள்.
அதேபோல ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப் பெருக்கு விசேஷமானது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கும், ஆடி அமாவாசையும் ஒரே நாளில் வருகிறது. அதாவது ஆகஸ்ட் 2ம் தேதி வருகிறது. அதை விட முக்கியாக குருப் பெயர்ச்சியும் அன்றுதான் நிகழ்கிறது.
ரொம்ப விசேஷம்
இதனால் மக்களிடையே பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படி ஒரே நாளில் மூன்று முக்கிய நிகழ்வுகளும் வருவது அபூர்வமாக கருதப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு நீர் நிலைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகும்
இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் மக்கள் வழக்கமாக குழுமும் இடங்களில் இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்புக்கு காவல்துறையும் தயாராகி வருகிறது. அதேசமயம், இந்த நிகழ்ச்சிகள் சிறக்க காவிரியில் தண்ணீர வர வேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப கூடுதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதாவும் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் நல்ல மழை
தற்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபிணி அணைகளுக்கு போதிய அளவில் நீர் வந்து கொண்டுள்ளது. தற்காப்புக்காக உபரி நீரை திறந்து விட்டு வருகிறது கர்நாடகா. இதனால் கடந்த சில நாட்களாக அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு
அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 5700 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 55.77 அடியாகவும் இருந்தது. இன்று நீர் வரத்து மேலும் உயர்ந்து 6186 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 56.26 அடியாகவும் உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஜெ. உத்தரவு
ஆடிப் பெருக்கு சமயத்தில் போதிய அளவில் காவிரியில் தண்ணீர் வர மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அதற்கேற்ப, மக்கள் மனம் குளிரும் வகையிலான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதாவும் வெளியிட்டுள்ளார். ஆடிப் பெருக்கையொட்டி கூடுதல் நீர் திறக்க அவர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.