ரஜினி எந்த முடிவெடுத்தாலும் சரியாக தான் இருக்கும்.. சொல்கிறார் தனுஷ்
சென்னை: ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகத்தான் இருக்கும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி, எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது என்றும் 23 ஆண்டு மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன் என்றும் தெரிவித்தார். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில வாழ்ந்து வரும் தான் ஒரு "பச்சை தமிழன்" என்று அறிவித்துக் கொண்டார்.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற ஆருடங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ், ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகளால் எங்கள் குடும்பத்திற்கு அழுத்தம் ஏதுமில்லை. அரசியல் குறித்து மட்டுமல்ல, எது குறித்தும் ரஜினி முடிவெடுத்தால் அது சரியான முடிவாகத்தான் இருக்கும் என்றார் தனுஷ்.