தர்மயுத்தம் தொடரும்... ஜெ., அணி வெல்லும் - ஓபிஎஸ்
இந்த எம்எல்ஏக்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்கும் போதுதான் உண்மை தெரியவரும். நாங்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் வெல்லும் இது சரித்திரம் என்றார். தர்மம் வெல்வதற்கு காலம் உள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினர்.
எம்எல்ஏக்களை அவரவர் தொகுதிக்கு அனுப்பி வையுங்கள், எம்எல்ஏக்கள் அவர்களை சந்தித்து விட்டு வாக்களிக்கட்டும் என்று கோரினோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம். ஆனால் அதற்கு சபாநாயகர் ஒத்துக்கொள்ளவில்லை. திமுக சட்டசபை உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.
திமுக உறுப்பினர்களை ஜனநாயக மரபுக்கு மாறாக வெளியேற்றி இன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றினர். இதை மக்களிடத்திலே விடப்பட்டிருக்கிறது. இந்த எம்எல்ஏக்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்கும் போதுதான் உண்மை தெரியவரும்.
நீங்கள் தொகுதிக்குள் வரலாமா என்று கேட்கும் போது அவர்களுக்கு புரியவரும். ஜெயலலிதா அணியான எங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்காலத்தில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெரும். அதற்கு காலம் வரும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். போர் முடிந்து விட்டது, தர்மயுத்தம் தொடரும் என்று செம்மலை கூறினார்.