காலையில் கொடியேற்றி விட்டு 11 மணிக்கே கொடியைக் கீழிறக்கிய தர்மபுரி அரசுப் பள்ளி!
தர்மபுரி: தர்மபுரி அருகே ஒரு அரசுப் பள்ளியில் காலையில் கொடியேற்றி விட்டு முற்பகலுக்குள் அதை கீழிறக்கிய ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்கு உள்பட்ட பெரியாம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, காலையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், விழா முடிந்ததும் மாணவர்கள், ஆசிரியர்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், காலை 11 மணியளவில் பள்ளி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியை காணவில்லை என புகார் வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள், பாலக்கோடு வருவாய்த் துறை அதிகாரிகள் பெரியாம்பட்டி பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது விழா முடிந்ததும் 11 மணியளவில் ஆசிரியர் ஒருவரே அந்தக் கொடியை கழற்றி கீழிறக்கி மடித்து வைத்து விட்டுப் போனது தெரிய வந்தது. திரும்ப வந்து கொடியை அவிழ்க்க சோம்பேறித்தனப்பட்டு இப்படிச் செய்துள்ளார் அவர்.
இதைடுத்து மீண்டும் கொடியை ஏற்றி மாலையில் முறைப்படி கீழிறக்கினர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.