டெல்லியில் இருந்தாலும் தப்பிக்க முடியாது.. ஃபெரா வழக்கில் ஏப் 27ல் தினகரன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த வழக்கு விசாரணையில் தினகரன் இருப்பதால் ஃபெரா வழக்கில் இன்று ஆஜராகவில்லை.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று ஆஜராகவில்லை. இரட்டை இலை தொடர்பான லஞ்ச வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் இருப்பதால் விசாரணைக்கு வர முடியவில்லை என்ற தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலர்களையும், லண்டன் ஹோட்டல் மூலம் 36.36 லட்சம் டாலர்களையும், 1 லட்சம் பவுண்டுகளையும் டெபாசிட் செய்ததாக டிடிவி தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் தினகரன் மீது அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி கண்டனம்
இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி இந்த வழக்கானது நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் டிடிவி தினகரன் ஆஜராகாததால் கண்டனம் தெரிவித்த நீதிபதி ஏப்ரல் 13-ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
எச்சரிக்கை
ஆனால் அன்றும் தினகரன் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, 19ம் தேதி ஆஜராகாவிட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்திருந்தார். இதையடுத்து டிடிவி தினகரன் 19ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வீட்டில் பூஜை
இந்த வழக்கில் மீண்டும் 20ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அவர் அன்றும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. தனது வீட்டில் பூஜை இருப்பதாகவும் கோயிலுக்கு செல்ல இருப்பதால் ஒரு நாள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு வக்கீல் கேட்டுக் கொண்டார்.
மீண்டும் எச்சரிக்கை
இதனால் நீதிபதி கடும் கோபம் அடைந்தார். வரும் இன்று டிடிவி தினகரன் கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அன்று ஆஜராகவில்லை என்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
டெல்லி விசாரணை
இந்நிலையில், இன்றும் டிடிவி தினகரன் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் டிடிவி தினகரன் 3 நாட்களாக விசாரிக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாலும் இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாலும் தினகரன் ஆஜராக முடியவில்லை என்று தினகரன் தரப்பு வக்கீல் எழும்பூர் கோர்ட்டில் கூறினார்.
ஒத்தி வைப்பு
இதனையடுத்து, வரும் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அன்று டிடிவி தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.