போயஸ் தோட்டம் பக்கமே வரக் கூடாது... "நாமக்கல் செந்திலுக்கு" ஜெ. உத்தரவு?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களைக் கவனித்து வரும் நாமக்கல் செந்தில் என்ற வழக்கறிஞரை இனிமேல் வீட்டுப் பக்கம் வர வேண்டாம் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
வழக்கறிஞரான செந்தில்தான், ஜெயலலிதா மற்றும் சசிகலாவோடு நேரடியாகப் பேசும் உரிமை பெற்றிருந்தவர். சொத்துக் குவிப்பு வழக்கில் பல்வேறு விவகராங்களை இவர் கவனித்து வந்தார். வக்கீல்களை ஏற்பாடு செய்வது முதல் பல காரியங்களை இவர்தான் கவனித்து வந்தார். தினசரி தோட்டத்திற்கு வந்து ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தி அவரது அட்வைஸுக்கேற்ப செயல்பட்டு வந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு என்றில்லாமல் பல்வேறு விவகாரங்களையும் இவர்தான் கவனித்து வந்தாராம். கிட்டத்தட்ட வெளியுலகுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான தொடர்பு போல இவர் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது இவரை திடீரென போயஸ் தோட்டம் பக்கமே வரக் கூடாது என்று ஜெயலலிதா கூறி விட்டதாக பேச்சு அடிபடுகிறது. ஏன் இந்த திடீர் உத்தரவு என்று தெரியவில்லை.
ஆனால் மக்களின் முதல்வர் போல, நிர்வாகத்தைக் கவனித்து வரும் அந்த "3 மக்களின் நிர்வாகிகள்தான்" செந்தில் பற்றி ஜெயலலிதாவிடம் தப்புத் தப்பாக போட்டுக் கொடுத்து விட்டதாக சொல்கிறா்ர்கள். இவர்களால்தான் செந்திலுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது தமிழக அரசு மட்டுமல்லாமல், ஜெயலலிதாவும் கூட இந்த மூவரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. நடப்பது எதுவும் புரியாமல் அதிமுகவினர் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கினறனர்.