டாக்டர்களிடம் "Thank You" என்று சொன்னாரா ஜெயலலிதா?... புதிய பரபரப்பு #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் தேங்க்யூ என்று கூறி ஆங்கிலத்தில் பேசியதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் டாக்டர்களிடம் நன்றி தெரிவித்ததாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம், கடந்த 6 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தனக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பேசியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை பரப்பி வருகிறது.
டாக்டர் சிவக்குமார் தலைமையில்
முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட டாக்டர் சிவக்குமார் தலைமையில் அப்பல்லோ டாக்டர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எய்ம்ஸ் டாக்டர்கள் மற்றும் சிங்கப்பூிரிலிருந்து வந்துள்ள பிசியோதெரப்பிஸ்ட்கள் என பெரிய குழுவே முதல்வருக்காக அயராது பாடுபட்டு வருகிறது.
25 நாட்களாக
கடந்த 25 நாட்களாக முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகள், சிகிச்சைகள் நடந்து வருகின்றன. இதுவரை அவரது உடல் நலம் குறித்து 10 அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
நன்றி சொல்லிப் பேசினார்
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தனக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் டாக்டர் உள்ளிட்ட டாக்டர்களிடம் அவர் பேசியதாகவும் அப்போது தனக்கு சிகிச்சை அளித்து வருவதற்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் அவர் பேசியதாக சொல்கிறார்கள்.
தேங்க்யூ சொன்னார்
ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதா டாக்டர்களிடம் தேங்க்யூ என்று சொன்னதாக அந்த செய்தி கூறுகிறது. இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள் தலையை ஆட்டி முதலவரின் நன்றியை ஏற்றுக் கொண்டனராம். அவரிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கினராம்.
டாக்டர்கள் மகிழ்ச்சி
முதல்வர் ஜெயலலிதா இந்த அளவுக்கு பேசியது டாக்டர்களிடையே மகிழ்ச்சியை பரப்பியுள்ளதாம். சிகிச்சை நன்கு பலன் தருவதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம். தொடர்ந்து சிகிச்சைகள் தொடர்ந்து வருகிறதாம்.
2 முறை தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தார்
இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று இரண்டு முறை தாகமாக இருக்கிறது என்று கூறி தண்ணீர் கேட்டு ஜெயலலிதா வாங்கிக் குடித்தார் என்று இன்னொரு தகவல் கூறுகிறது. மேலும் வேக வைத்த ஆப்பிள்களை அவர் சாப்பிட்டதாகவும் அத்தகவல் கூறுகிறது.
உறுதிப்படுத்தவில்லை
இருப்பினும் இந்தத் தகவல்கள் எல்லாம் உண்மைதானா என்பது குறித்து எந்த உறுதித் தகவலும் இல்லை. அப்பல்லோ மருத்துவமனையும் கடந்த ஒரு வாரமாக அறிக்கை ஏதும் வெளியிடாமல் உள்ளதால் இது எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை.