ஸ்டாலினை பார்த்துட்டாரு... தீ போல பரவிய செய்தியால் பதட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு!!
மதுரை: ஒரு மனிதனுக்கு பிரச்சினை எந்த ரூபத்தில் வரும், எந்தத் திசையில் வரும், எப்படி வரும் என்பதை கணிக்கவே முடியாது. இப்போது சனிப் பெயர்ச்சி வேறு.. இப்படி ஒரு நூதன பிரச்சினையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு சிக்கித் தவித்து வருகிறார்.
மதுரையில் வழக்கம் போல கடந்த 22ம் தேதி காலையில் தனது மனைவியோடு மாநகராட்சி பூங்காவில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் செல்லூர் ராஜு. அந்த பக்கமாக அப்போது பார்த்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திடீரென அவரது மனைவியுடன் வாக்கிங் வந்து விட்டார்.
திடீரென எதிரில் ஸ்டாலினைப் பார்த்த ராஜு, மரியாதைக்காக வணக்கம் கூறினாராம். ஸ்டாலினும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே வணக்கம் வைத்துள்ளார். இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவரவர் வழியில் போய் விட்டனர்.
ஆனால் வெளியில் மேட்டர் வேறு விதமாக பரவி விட்டது. அதாவது, செல்லூர் ராஜுவும், மு.க.ஸ்டாலினும் சந்தித்துப் பேசி விட்டதாக செய்தியை பரப்பிவிட்டனர் ராஜுவுக்கு எதிரான கோஷ்டிகள். இதனால் ராஜு பதறிப் போய் விட்டார்.. அடடா, பத்த வச்சுட்டீங்களே என்று அதிர்ந்து போன அவர் பத்திரிகையாளர்களுக்குப் போனைப் போட்டு நான் அவரை சந்திக்கவே இல்லை அய்யா. இதை நியூஸா போடுங்க என்று கோரிக்கை வைக்க, பல பத்திரிக்கையாளர்களுக்கு அப்போது தான் நடந்ததே தெரிய வந்ததாம்.
இருந்தாலும் தற்போது மேட்டர் மெட்ராஸ் வரை வந்து விட்டதாக சொல்கிறார்கள். பாவம் அமைச்சர் செல்லூர் ராஜு.