ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி.. அதிமுக இணைப்பு குறித்து மக்கள் கருத்தை கேட்டாரா ஓபிஎஸ்?
அதிமுக இணைவதற்கு தொகுதி மக்களின் கருத்துகளை ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கேட்டார்களா? என மக்கள் கேட்கிறார்கள்.
சென்னை: "கூவத்தூர் எம்எல்ஏ"-க்களுக்கு அன்று அறிவுரை கூறிய ஓபிஎஸ் இன்று அதிமுக இணைவதற்கு எத்தனை பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டார் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
எல்லாம் பணம், பதவிபடுத்தும் பாடு என்றும், அதனால்தான் இரு அதிமுக பிரிவுகளும் மீண்டும் இணையத் திட்டமிடுவதாகவும் அவர்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின. பதவியும் வேண்டாம், கட்சியும் வேண்டாம் என்று கூறி வந்த சசிசகலா, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை முதலில் கைப்பற்றினார். பின்னர் முதல்வர் பதவிக்கும் குறி வைத்தார். ஓ.பி.எஸ்ஸை ஓரம் கட்டினார்.
கூவத்தூரில் சிறை
ஆனால் அதிரடியாக, ஒரு நாளும் இல்லாத திருநாளாக புரட்சி செய்தார் ஓ.பி.எஸ். அவருக்கும் ஒரு கூட்டம் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து தங்கள் ஆதரவு எம்எல்ஏ-க்களை ஓபிஎஸ் அணியினரோ அல்லது எதிர்க்கட்சியினரோ விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற பீதியில் சசிகலா அத்தனை எம்எல்ஏ-க்களையும் கூவத்தூரில் சிறை வைத்தார்.
ஓபிஎஸ் உபதேசம்
கூவத்தூரில் உள்ள எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னர் தங்கள் தொகுதி மக்களின் கருத்தை கேட்டறிய வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோளை முன் வைத்தார் ஓபிஎஸ். உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களின் கருத்தைக் கேளுங்கள் என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தார். இதற்கு யாரும் மசியவில்லை.
சொத்து குவிப்பு வழக்கு
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, திவாகரன், இளவரசி உள்ளிட்டோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். எடப்பாடி முதல்வரானார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
அதிமுக இணைப்பு
இப்போது திடீரென தினகரனுக்கு எதிராக அதிமுக அம்மா திரும்பியுள்ளது. ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதற்கும் தயாராகி விட்டது. ஓ.பி.எஸ்ஸும் கூட தயாராகி விட்டார். சில நிபந்தனைகளுடன். அதுதான் மக்கள் கண்களை உறுத்துகிறது. காரணம், இத்தனை காலம் நடந்து கொண்ட ஓ.பி.எஸ்.ஸுக்கும், தற்போதைய ஓ.பி.எஸ்ஸுக்கும் இடையே காணப்படும் வித்தியாசம்தான்.
மக்கள் கருத்தைக் கேட்டாரா
அன்று சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதற்கு முன்பு மக்களின் கருத்தைக் கேளுங்கள் என்று திரும்பத் திரும்பக் கூறினார் ஓ.பி.எஸ். ஆனால் இன்று அவரே மக்களின் கருத்தைக் கேட்காமல், குறைந்தபட்சம் தனது தொகுதி மக்களிடமாவது கூட கேட்காமல் எப்படி இணைப்பு முடிவுக்கு வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நியாயமான கேள்விதான்.. பதில் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை.