ஜெ.க்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் குழுவில் ஊட்டச்சத்து நிபுணர்கள் இணைந்தனர்! என்ன அவசியம்?
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் குழுவில் ஊட்டச்சத்து நிபுணர்களும் இணைந்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையின், மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் என்.சத்தியபாமா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது:
முதல்வர் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், சுவாச உதவி, பிசியோதெரபி ஆகியவை டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறது. அப்பல்லோ ஆஸ்பத்திரியை சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதயநோய் சிகிச்சை மூத்த நிபுணர்கள், சுவாச சிகிச்சை மூத்த மருத்துவர்கள், தொற்றுநோய் சிகிச்சை துறை மூத்த மருத்துவ ஆலோசகர்கள், நாளமில்லா சுரப்பி சிகிச்சை மூத்த நிபுணர்கள், நீரழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழு முதல்-அமைச்சருக்கு சிகிச்சையும், மருத்துவ உதவியும் அளித்து வருகிறது.
ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்களை கொண்ட உணவு வழங்கப் படுவதை உணவியல் நிபுணர் கள் குழுவைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் கவனித்து வருகிறார்கள். முதல்வர் நன்றாக பேசுகிறார். அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட 9 அறிக்கைகளில், ஊட்டச்சத்து நிபுணர் குறித்த தகவல் இடம்பெறாத நிலையில், இப்போது அதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரை அவசியம். எனவே, முதல்வர் திட மற்றும் திரவ உணவுகளை அவரே எடுத்துக்கொண்டு வருகிறார் என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.