சுயநலத்தோடு அணிகள் இணைந்தால் ஆயுள் நீடிக்காது- டிடிவி தினகரன்
அணிகள் இணைப்பு பதவியை தக்கவைக்கவும், சுயநலத்திற்காகவும் என்றால் அது ஆயுள் நீடிக்காது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும், சுயநலத்தோடு இணைந்தால் அதன் ஆயுள் நீடிக்காது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சசிகலாவை இன்று தனது குடும்பத்தினருடன் சந்தித்து பேசினார் டிடிவி தினகரன். அதிமுகவில் பரபரப்பான அரசியல் நகர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலா உடனான இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆபரேசன் நடக்கும்
சிறையில் உள்ள சசிகலா தன்னை சந்திக்க வந்த டிடிவி தினகரனுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் டிடிவி தினகரன். அப்போது அவர், சசிகலா சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார், அடுத்தடுத்து ஆபரேசன் நடக்கும் என்றார்.
ஆயுள் நீடிக்காது
தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இணைப்பு இருக்க வேண்டும். தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக நடந்தால் அது சரியாக இருக்காது. சிலரின் சுய லாபத்திற்காகவும், பதவியை காப்பாற்றவும் அணிகள் இணைந்தால் அதற்கு ஆயுள் நீடிக்காது.
Recommended Video
நிரபராதி என்று நிரூபிப்போம்
ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைத்துள்ள முதல்வரின் அறிவிப்புகளால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. சசிகலா மீது எந்த தவறும் இல்லை என்று நாங்கள் நிரூபித்து பத்தரை மாத்து தங்கமாக வெளி வருவோம்.
அவசரம் கூடாது
வேதா நிலையத்தை நினைவில்லமாக்குவது சுயலாபத்திற்கு என்றால் அது சரியாக இருக்காது. அவசர கோலத்தில் நினைவில்லமாக அறிவிப்பதை விட தொண்டர்களிடம் கருத்தை கேட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றார்.
ஆதரவு எம்எல்ஏக்கள்
எடப்பாடி பழனிச்சாமி அணியில் எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் பலர் இருக்கிறார்கள். மேலூர் பொதுக்கூட்டத்திற்கு வராதவர்கள் தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருவார்கள்.
ஒன்றுமில்லை
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர்கள் சந்தித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தினகரன், அதனால் ஒன்றுமில்லை என்றார்.