மலைபோல் குவிந்திருக்கும் மக்கள் பிரச்சினைகள்... "சீசா" விளையாடும் எம்எல்ஏக்கள்!
தமிழகத்தில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க அதை கண்டும்காணாமல் புதுவையில் ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர் 19 எம்எல்ஏ-க்கள்.
சென்னை: தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. இதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் சிறு பிள்ளைத்தனமாக ஊஞ்சல், சறுக்கு மரம், சீசா உள்ளிட்ட விளையாட்டுகளை தங்கதமிழ் செல்வன் உள்ளிட்டோர் விளையாடுவதை பார்க்கும் மக்கள் கடும் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நம்பிக்கையை இழந்துவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் தரப்பு எம்எல்ஏ 19 பேர் கடிதம் கொடுத்தனர்.
தற்போது இவர்கள் 19 பேரையும் எந்த அணியோ அல்லது கட்சியோ விலை கொடுத்து வாங்கிவிடாமல் இருக்க கோழி அடைகாப்பது போல் புதுச்சேரியில் அடைகாத்து வருகிறார் டிடிவி தினகரன்.
3-ஆவது நாளாக...
புதுச்சேரி சின்னவீரானம்பட்டினம் என்ற இடத்தில் உள்ள தி விண்ட்பிளவர் சொகுசு விடுதியில் இன்று 3-ஆவது நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 19 பேருக்கும் தேவையான "சகலமும்" அங்கேயே கிடைக்கிறது.
|
ஜாலியாக....
மக்களை பற்றி கவலைப்படாமல் தங்கள் சுயலாபத்துக்காக இந்த எம்எல்ஏ-க்கள் விடுதியில் தங்கி ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர். இவர்களுக்கென்று தினமும் குறும்பாட்டு கறி சமைக்கப்படுகிறதாம். பிடித்தமான உணவுகளும் சமைத்து தரப்படுகிறதாம்.
சிறுபிள்ளைத்தனமாக....
விடுதியில் தங்கிய நாள் முதலே அதிகாலையில் எம்எல்ஏ-க்கள் வாக்கிங் செல்வது, ஜாகிங் செல்வது, பந்தாடுவது, ஊஞ்சல் ஆடுவது, சீசா விளையாடுவது உள்ளிட்டவைகளை விளையாடி வருகின்றனர். அதிலும் இந்த சொகுசு வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வருகிறார் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் ஆவார்.
ஆண்டிப்பட்டியில்...
தொகுதிப் பிரச்சினைகள் குறித்தெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கதமிழ் செல்வன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சீசா விளையாடுவதும், ஊஞ்சலாடுவதும் பார்க்கும் மக்களை கடுப்பேற்றுகிறது.
ஓய்வுக்காக...
இந்த விடுதியில் ஓய்வெடுக்க தங்கியுள்ளதாக கூறிய தங்க தமிழ் செல்வனிடம் மக்கள் பிரச்சினை ஏராளமாக இருக்கும்போது இவ்வாறு தங்குவது சரியா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, ஒரு நாள் தங்கி ஓய்வெடுக்கக் கூடாதா, ஒரு நாளில் என்ன வந்து விட போகிறது என்றார். ஆனால் இன்றுடன் மூன்று நாள்கள் ஆகிவிட்டன. இந்த கூத்து இன்னும் எத்தனை நாள்களுக்கு செல்லும் என்று தெரியவில்லை.
வேளா வேளைக்கு உணவு, தங்க இடம், உடுத்த உடை கிடைக்கும்போது மக்கள் பிரச்சினையாவது மண்ணாங்கட்டியாவது!