திவாகரனிடம் 30... தினகரனிடம் 37 எம்.எல்.ஏக்கள்.. எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் அம்மா கோஷ்டி?
திவாகரன், தினகரனுக்கு ஆதரவாக 67 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக எடப்பாடி கோஷ்டிக்கு அம்மா கோஷ்டி மிரட்டல் விடுத்துள்ளது.
சென்னை: திவாகரனின் அன்புக்கு கட்டுப்பட்டு 30 எம்.எல்.ஏக்களும் தினகரனிடம் 37 எம்.எல்.ஏக்களும் இருப்பதாக எடப்பாடியை அதிமுக அம்மா கோஷ்டி மிரட்டி வருகிறது.
தினகரன் மீண்டும் தீவிர அரசியலில் குதித்திருப்பது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் காலத்தின் குரலில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த டிவி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக (அம்மா) கோஷ்டியின் காசிநாதபாரதி கூறியதாவது:
திராவிட தலைமை
டெல்லி குறிவைத்திருக்கும் தலைமைதான் திராவிடத் தலைமை. தினகரன்தான் உண்மையான திராவிடத் தலைவர். ஜனாதிபதி தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்க முடியாது என்பதால் பாஜக வேட்பாளரை ஆதரிக்க நேர்ந்தது.
திவாகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
தினகரன்- திவாகரன் சமாதானமடைவதற்கு முன்பே திவாகரனின் அன்புக்கு கட்டுப்பட்டு அமைச்சர்கள் உட்பட 30 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். எடப்பாடி வசம் இருக்கும் ஆட்சி அதிகாரத்தை பற்றி கவலைப்படாமல் தற்போது 37 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்தனர்.
மக்கள் தலைவர்
இப்படி திவாகரனிடம் 30 எம்.எல்.ஏக்கள், தினகரனிடம் 37 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அனைவராலும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுவிட முடியாது. தினகரன் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்... அதனால்தான் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இவ்வாறு காசிநாதபாரதி கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்?
அப்போது குறுக்கிட்ட அரசியல் ஆய்வாளர் ரவீந்தரன் துரைசாமி, திவாகரன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கணக்கு இருக்கட்டும்.. முதலில் 24 எம்.எல்.ஏக்களைக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரமுடியுமா? அப்படி கொண்டு வரும்போது இந்த கணக்கை பற்றி பேசலாம் என சுட்டிக்காட்டினார்.
மிரட்டல்?
தங்களிடம் எம்.எல்.ஏக்கள் 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதாக தினகரன் கோஷ்டி நிர்வாகிகள் பேசிவருவதே முதல்வர் எடப்பாடி அரசுக்கு விடுக்கப்படும் மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆட்சி அதிகாரத்தை அவ்வளவு எளிதாக அதிமுக கோஷ்டிகள் இழக்க விரும்பாது என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகும்.