வெளிநடப்பு.... ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்த தினகரன்.. ஆட்சியை பறிகொடுக்கிறார் எடப்பாடி?
சட்டசபையில் தமது கோஷ்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனை வெளிநடப்பு செய்ய வைத்து எடப்பாடி அரசை ஆட்டம் காண வைத்துவிட்டார் தினகரன்.
சென்னை: தமது ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனை வெளிநடப்பு செய்ய வைத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை ஆட்டம் காணவைத்துவிட்டார் தினகரன்.
தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் திஹார் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு ஜாமீனில் தினகரன் வெளியே வந்தது முதலே எடப்பாடி அரசுக்கு ஆபத்து தொடங்கிவிட்டது. தினகரனை ஒதுக்கி வைப்பதில் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் அறிவித்தார்.
ஆனால் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தினகரனை நேரில் சந்தித்து பேசினர். தினந்தோறும் தினகரனுடன் ஆலோசனை நடத்தியும் வருகின்றனர்.
அமைச்சர் பதவிக்காக...
தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரையில் எப்படியும் எடப்பாடியை மிரட்டி அமைச்சர் பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். ஆனால் எடப்பாடி கோஷ்டி தரப்போ, தினகரன் கோஷ்டியை எப்படியும் 'உறவாடி' ஒழித்து கட்டுவது என உறுதியாக இருக்கிறது.
வெளிநடப்பு
இந்த கண்ணாமூச்சி விளையாட்டின் உச்சகட்டமாகத்தான் இன்று தொகுதி கோரிக்கையை முன்வைத்து தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் எடப்பாடி அரசைக் கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே அரசைக் கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது என்பது அதிமுக கோஷ்டி மோதலின் உக்கிரத்தையே காட்டுகிறது.
கொங்கு கோஷ்டிக்கு பதிலடி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தினகரன் கோஷ்டியினர், இது தொடக்கம்தான்... இப்பதான் நாங்கள் எங்கள் ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். எங்கள் வழிக்கு வரும்வரை எடப்பாடி அரசுக்கு இத்தகைய குடைச்சல் தொடரத்தான் செய்யும். அவர்களைப் பொறுத்தவரை கொங்கு கோஷ்டி வசமே கட்சியும் ஆட்சியும் இருக்க சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.
தினகரன் தலைமைதான்
இந்த கனவு எதுவும் பலிக்காது; தினகரன் தலைமையில்தான் அதிமுக இயங்கும். தேவைப்பட்டால் தினகரனையும் முதல்வராக்க தயங்கமாட்டோம் என கொந்தளிக்கின்றனர். எடப்பாடி கோஷ்டியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என ஓபிஎஸ் அணி குழுக்களையெல்லாம் கலைத்துவிட்டது. இந்த நிலையில் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்களும் பகிரங்கமாக கலகக் குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர்.
எடப்பாடி அரசு கவிழும்?
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிலைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. கொங்கு கோஷ்டியின் அதிதீவிர விசுவாச யோசனைகளால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை பறிகொடுக்கத்தான் நேரிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.