உச்சகட்ட மோதல்... ஆதரவை வாபஸ் வாங்கும் தினகரன் கோஷ்டி? ஜூலையில் கவிழும் எடப்பாடி அரசு?
அதிமுகவின் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு அதிமுக அரசும் கவிழ்ந்துவிடும் என்றே தெரிகிறது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அரசு கவிழ்வது உறுதிதான் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது எடப்பாடி- தினகரன் கோஷ்டி மோதல்.
அதிமுக பல கோஷ்டிகளாக பிளவுபட்ட நிலையில் திடீரென இணைப்பு பேச்சுவார்த்தை என கூறப்பட்டது. இதற்காக எடப்பாடி கோஷ்டியும் ஓபிஎஸ் கோஷ்டியும் குழு அமைத்தது.
தினகரனால் கலகக் குரல்
எடப்பாடி கோஷ்டி, தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். தினகரன் சிறைக்குப் போய்விட்டு திரும்பிய நிலையில் கட்சிப் பணியாற்றுவேன் என அறிவிக்கப் போய் கலகக் குரல் வெடித்தது.
பட்டும்படாமல் விமர்சனம்
இப்போது தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் கோஷ்டிகளாக இருந்து வருகிறது. தினகரன், எடப்பாடி கோஷ்டிகள் இதுவரை பட்டும்படாமல் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர்.
பகிரங்க மோதல்
ஆனால் இப்போது இருதரப்பும் பகிரங்கமாக மோதத் தொடங்கிவிட்டனர். ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சிப்பதில் சளைக்காமல் களமாடுகின்றனர். எடப்பாடி கோஷ்டி எம்பி ஹரியோ, குற்றவாளி சசிகலா எப்படி கட்சியை நடத்த முடியும்? என பகிரங்கமாக கேள்வி எழுப்புகிறார்.
பாய்ச்சல்
இன்னொரு பக்கம் தினகரன் கோஷ்டி வெற்றிவேல், எடப்பாடி வாயை திறக்கட்டும், நரசிம்மராவ் மாதிரி இருக்காதீங்க என சாடுகிறார். அதிமுக எடப்பாடி- தினகரன் கோஷ்டி மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஆதரவு வாபஸ்?
இதேநிலை நீடித்தால் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக எடப்பாடி அரசுக்கு ஆதரவு தரமாட்டோம் என அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி அறிவிக்கும் நிலையில் என்னதான் ஓபிஎஸ் கோஷ்டி ஆதரவு கொடுத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைதான் உருவாகும்.
இறுதி அத்தியாயம் தொடங்கிவிட்டது
இதனால் ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கும் அதிமுகவுக்கும் முடிவுரை எழுதப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழகம் விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையைத்தான் இந்த மோதல் உருவாக்கி வருகிறது.