வித்யாசாகர் ராவ் ஆளுநரா? எடப்பாடி அண்ட் கோவின் அவைத் தலைவரா? தினகரன் காட்டம்
திருச்சி: அதிமுகவுக்கு விரோதமாக செயல்படும் துரோகிகளின் கூட்டாட்சியை வீட்டுக்கு அனுப்பவே போராடிக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் திருச்சி நீட் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருச்சி உழவர் சந்தையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் டிடிவி. தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்க பட்டது முதல் ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமின்றி, ஏழரை கோடி தமிழர்களும் அவர் உடல்நலன் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அது நிறைவேறாமல் ஜெயலலிதா அம்மா நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
சசிகலா நினைத்திருந்தால் அன்றே தமிழக முதல்வராகி இருக்க முடியும். ஆனால் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று தான் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். ஆனால் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் பழனிசாமியை ஆட்சிப் பொறுப்பிலே அமர வைத்தார்.
இன்று தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியா நடக்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இன்று நடைபெற்று கொண்டிருப்பது துரோகிகளின் கூட்டாட்சி, இந்த துரோகிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தான் போராடி வருகிறோம்.
நீதி கிடைக்கும்
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிற காரணத்தால் தான் இன்று எனக்கு ஆதரவாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பழிவாங்கும் விதமாக தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள். தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த மாதம் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் ஒன்றிணைவதாக அறிவித்துவிட்டு பொதுச்செயலாளரை நீக்குவோம், கட்சியில் இருந்து நீக்குவோம் என்று அறிவித்ததால் தான் வெகுண்டெழுந்து எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர்.
ஆளுநர் நடவடிக்கை இல்லை
நாங்களும் பொறுமையாக காத்திருந்தோம், ஆளுநர் உட்கட்சி பிரச்னை என்று சொல்லி 3 வார காலமாக தட்டிக் கழித்து விட்டார். கடந்த 7ம் தேதி எம்பி எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினோம், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
வெற்றி பெறுவோம்
ஆனால் சபாநாயகர் எம்எல்ஏக்கள் திமுகவுடன் கைகோர்த்து செயல்படுவதாகக் கூறி அவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். நிச்சயம் உங்கள் ஆதரவோடு நீதிமன்றத்திலே வெற்றி பெறுவோம், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்பதை நிரூபிப்போம். மீண்டும் பழனிசாமி அருதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி வரும் அப்போது பழனிசாமி, அமைச்சர்களும் வீட்டுக்கு போகும் காலம் வந்துவிட்டது.
ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்
திமுகவுடன் கைகோர்த்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறீர்களா என்று என்னைக் கேட்கிறார்கள், ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தாமல் ஊழல் ஆட்சியை நடத்தும் பழனிசாமி அன்ட் கோவின் ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். எம்ஜிஆர் திமுகவிற்கு எதிர்ப்பாகத் தான் அதிமுகவை உருவாக்கினார். அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி அவர்களுடன் கைகோர்ப்போம். அதிமுகவின் பிரதான எதிரி திமுக, இந்த ஆட்சி எப்போது கவிழ்ந்தாலும் மீண்டும் வெற்றி பெற்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சபதமாகக் கூறுகிறேன்.
|
துரோகம் செய்தவர்கள் ஆட்சி செய்யக் கூடாது
தமிழக மக்கள் துரோகம் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆளுநர் இந்த நேரத்தில் சரியான முடிவு எடுத்து அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அப்படி செய்தால் தான் ஆளுநர் பதவிக்கு மக்கள் மீது நம்பிக்கை வரும். ஆளுநர் பழனிசாமி அண்ட் கோவின் அவைத் தலைவராக செயல்படுகிறாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது என்று தினகரன் பேசியுள்ளார்.