டிடிவி தினகரனும் சசிகலாவும் தான் எங்கள் மூச்சு காற்று.... எங்கள் குருதி... நாஞ்சில் சம்பத் ஆவேசம்!
மதுரை திருப்பரங்குன்றத்தில்தினகரன் கைதுக் கண்டித்து நடந்த கண்டனக் கூட்டத்தில் சசிகலாவும் தினகரனும் தான் அதிமுகவே ஒழிய ஒபிஎஸ் அல்ல என கூறினார்.
மதுரை: டிடிவி தினகரனும் சசிகலாவும் தான் அதிமுக கட்சியே ஒழிய, ஒபிஎஸ் அல்ல என மதுரையில் தினகரன் கதைக்கண்டித்து நடந்த கண்டனக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
தினகரன் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன கூட்டம் நடத்தி வருகிறார் தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத்மற்றும் கர்நாடக அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி. மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: ''யூதாஸும் எட்டப்பன்கலும் வராலாற்றில் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு ஒ.பன்னீர் செல்வம் சமகாலசாட்சி.
அரசியல் அறம்
ஜெயலலிதா அமைத்த ஆட்சிக்கு எந்த ஊனமும் வந்துவிடக் கூடாது என கட்சியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது நான் நேற்றே விலகி விட்டேன் என டிடிவி தினகரன் சொன்னதை உலகம் வியக்கிறது. அரசியலில் அறம் தொலைந்து விடவில்லை என்பதை தினகரன் அன்று வெளிப்படுத்தினார்.
ஒபிஎஸ் நோக்கம்
இன்றைக்கு பூனைக் குட்டி வெளிவந்துவிட்டது.ஒபிஎஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். தொண்டர்களும் மக்களும் காறி உமிழ்ந்ததைத் தொடர்ந்து அந்த தகவல்களை நீக்கிவிட்டார். இந்த ஆட்சியை கவிழ்ப்பதுதான் ஒபிஎஸ் நோக்கம். அதற்கு ஆட்சியை விமர்சிக்கிறார்கள். மைத்ரேயன் ஒரு அரசியல் புரோக்கர்.
ஆட்சியை அசைக்க முடியாது
இந்த ஆட்சியை விமர்சிக்க ஒபிஎஸ்ஸுக்கோ அவருக்கு பல்லக்குத் தூக்கும் எந்த பாவிகளுக்கோ அருகதை கிடையாது. இந்த 4 ஆண்டுகளும் ஆட்சி முழுமையாக நடக்கும். இதனை யாரும் எதுவும் செய்ய முடியாது.
சசிகலாவும் தினகரனும்தான் அதிமுக!
ஒபிஎஸ்ஸின் தர்மயுத்தம் இனியும் செல்லுபடியாகாது. சசிகலாவையும் தினகரனையும் விலக்கி வைக்க வேண்டும் என்கிறார்கள். எங்கள் மூச்சுக் காற்றையே நிறுத்த வேண்டும் என்கிறார்கள். எங்கள் குருதி ஓட்டத்தையே நிறுத்த வேண்டுமென்கிறார்கள். டிடிவி தினகரனும் சசிகலாவும் தான் அதிமுக கட்சியே ஒழிய, ஒபிஎஸ் அல்ல'' - இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.