திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்ட தினகரன் ஆதரவாளர்கள்!
திருச்சியில் விழாவில பங்கேற்க வந்த அமைச்சர் வெல்லமண்டி ராஜேந்திரன், வளர்மதி, குமார் எம்.பி ஆகியோரை தினகரன் ஆதரவாளரான ராஜராஜன் தனது கோஷ்டியுடன் வந்து முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டு தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது தினகரன் ஆதரவாளரான ராஜராஜன் தலைமையில் சிலர் அமைச்சரின் காரை வழிமறித்தனர்.
மேலும் அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் 'அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனை நீக்குவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். திருச்சி மாவட்ட செயலாளர், அமைச்சர் என்ற பொறுப்புகளிலிருந்து அந்த முடிவை நீங்கள் எடுத்தீர்கள். அதேபோல், மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்' என எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்த அமைச்சர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளரான ராஜராஜன் கோஷ்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.
இருதரப்புக்கும் கைகலப்பு முற்றி, ராஜராஜன் கோஷ்டியினரை துரத்தி அடிக்க ஆரம்பித்தனர். அதனால் ராஜராஜன் கோஷ்டி அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் குமார் எம்.பி ஆகியோரை தினகரன் ஆதரவாளர் ராஜராஜன் கூட்டமாக வந்து தாக்கினார். தகாத வார்த்தைகளைப் பேசினார் என புகாரில் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.