"ஜாய்ஃபுல்" கூவத்தூர்.. "கலர்ஃபுல்" வின்ட்பிளவர்.. 19 தினகரன் எம்எல்ஏக்களுக்கு "2வது லட்டு"!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்திலுள்ள தி விண்ட் ப்ளவர் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி : டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் சின்னவீராம்பட்டினத்திலுள்ள தி விண்ட் ப்ளவர் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடற்கரையை ஒட்டியுள்ள இந்த விடுதி மெகா கூவத்தூர் போலவே காட்சி தருகிறது.
Recommended Video
தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அசாதாரண சூழல் ஏற்படும்போதெல்லாம் ரெசார்ட்டில் எம்எல்ஏக்களை தங்க வைப்பது ட்ரெண்ட்டான விஷயமாக இருக்கிறது. சசிகலா முதல்வராக பொறுப்பேற்க 122 எம்எல்ஏக்களை கூவத்தூர் ரெசாட்டில் தங்க வைத்து சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மூக்கு முட்ட சாப்பாடு, சில பல ஜாலி விஷயங்கள் என்று சுமார் 10 நாட்கள் ஜாலியாக இருந்தனர் எம்எல்ஏக்கள். ஆனால் கடைசியில் சசிகலா ஜெயிப்பதற்கு பதிலாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் முதல்வராக பழனிசாமி முன் நிறுத்தப்பட அவருக்கு வாக்களித்தனர்.
பிப்ரவரி மாதம் முதல் 7 மாதங்கள் எடப்பாடி அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணிகள் இணைப்பு என்று சொல்லி ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி என்று பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர்.
மினி கூவத்தூரான 'தி விண்ட் ப்ளவர்'
இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை முதல்வர் பழனிசாமி தரப்பு தங்கள் வசம் இழுத்துவிடக் கூடாது என்பதற்காக 19 எம்எல்ஏக்களும் பொத்தினாற் போல புதுச்சேரிக்கு தள்ளிச் செல்லப்பட்டுள்ளனர். புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தி விண்ட் ப்ளவர் ரெசார்ட்டில் இவர்களுக்காக வெள்ளிக்கிழமை மாலை வரை விடுதி புக் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சகல வசதிகளும் நிறைந்தது
கடலும் சுண்ணாம்பு ஆறும் சூழ அமைந்துள்ள இந்த ரெசார்ட் பார்ப்பதற்கு கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட் போலவே இருக்கிறது. 20 அறைகள் கொண்ட இந்த ரெசார்ட்டில் தியானம் செய்ய தனி அறை வசதி, உயர்ரக மதுபான பார்கள், நீச்சல் குளம் என்று இளைப்பாறுதலுக்கு ஏற்ற சகல விஷயங்களும் உள்ளன.
இப்போது என்னவோ?
கூவத்தூரில் இருந்த போதே அமைச்சர்களுக்கு சசிகலா தரப்பு கோடிக்கணக்கில் பேரம் பேசியதோடு தங்கம் உள்ளிட்டவற்றை வழங்கியதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ கூறியதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது அப்படியே மூடி மறைக்கப்பட்ட நிலையில் தற்போது 19 எம்எல்ஏக்கள் தி விண்ட் ப்ளவர் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எம்எல்ஏக்களுக்குத் தான் வாழ்வு
எது எப்படியாக இருந்தாலும் அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மக்களும் தொண்டர்களும் குழப்பத்தில் இருந்தாலும் எம்எல்ஏக்களின் பாடு மட்டும் நல்லபடியாகத் தான் இருக்கிறது. டென்ஷனை குறைக்க புதுச்சேரி ரெசார்ட் சென்றுள்ள எம்எல்ஏக்கள் யாருக்கு டென்ஷனை ஏற்றப் போகிறார்கள் என்பதே அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளாக இருக்கிறது.