ஆளுநரை இன்று சந்திக்கிறது தினகரன் குரூப்.. என்ன பேசுவார்கள்?
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவை நேரில் சந்திக்கவுள்ளனர்.
Recommended Video
சென்னை: ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்து விட்டன. இதனால் தினகரன் தரப்பு தனித்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.
அணிகள் இணைப்பு குறித்து நேற்று காலை முதலே டென்ஷன் நிலவி வந்தது. இந்த நிலையில் பிற்பகல் வாக்கில் இரு அணிகளும் இணைந்தன. இதையடுத்து தினகரன் தரப்பு தீவிர ஆலோசனையில் இறங்கியது.
மாலைக்கு மேல் இருள் கவ்வத் தொடங்கியதும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அரை மணி நேரம் தியானம் செய்தனர். தியானத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது, இணைப்பு தொடர்பாக தங்களிடம் கேட்கவில்லை என்று அவர்கள் குறை கூறினர்.
மேலும், சசிகலாவை பொதுச்செயலராக்கியது ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான். பொதுக்குழுவை கூட்டி தற்காலிக பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்தனர். 3000 பொதுக்குழு உறுப்பினர்களும் சசிகலாவை ஏற்றுக் கொண்டோம் சொந்தக்காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக கூறினார் ஒ.பன்னீர் செல்வம். ஓபிஎஸ், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர்
சசிகலாவினால் அடையாளம் காட்டப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு 122 பேர் ஆதரவாக வாக்களித்தோம். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்தவர் ஓ.பன்னீர் செல்வம். இரட்டை இலையை முடக்கியவர், அதிமுக அரசை ஊழல் அரசு என்று கூறியவர் ஓபிஎஸ் 10 எம்எல்ஏக்களை வைத்துள்ளார். அவர் ஆலோசனை நடத்திதான் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் சென்றோம். 9 எம்எல்ஏக்களுக்கு முக்கியத்துவம் தரும் நீங்கள் எங்களை கேட்கவிலையே. இரட்டை இலையை முடக்கிய அதிமுகவை முடக்கிய ஓபிஎஸ்ஸை ஏற்க முடியாது. 10 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்திருக்கும் ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?
ஓபிஎஸ்ஸை சேர்ப்பது குறித்து எங்களிடம் கேட்க வேண்டுமா? இல்லையா?. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தானே போனோம். 25 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் எங்களை ஏன் மதிக்கவில்லை. ஜெயலலிதா சமாதியில் கண்ணீர்விட்டு குறைகளை கூறியிருக்கிறோம். நாளை ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து பேசுவோம். அதன்பிறகு எங்களின் நடவடிக்கைகள் ஒட்டு மொத்தமாக அறிவிப்போம் என்றனர்.
அதன்படி இன்று அனைவரும் இணைந்து ஆளுநரைச் சந்தித்துப் பேசவுள்ளன. அப்போது என்ன மாதிரியான கோரிக்கையை அவர்கள் வைப்பார்கள் என்பது தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட கட்சி விவகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும் என்பது தெரியவில்லை. ஒரு வேளை அவரை சந்திப்பதாக இருந்தால் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் அல்லது ஆதரவு என்பதைத் தெரிவிக்கத்தான் இருக்க முடியுமே தவிர தனிப்பட்ட கட்சி விவகாரத்தில் ஆளுநரை தலையிட கேட்டுக் கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.