ஒண்ணா சேர்ந்திருங்க.. இல்லாட்டி கலைச்சிருவேன் - ஓபிஎஸ், ஈபிஎஸ் ஐ எச்சரித்த தினகரன்
மறுபடியும் டைம் கொடுக்கறேன் 2 அணியும் ஒண்ணா சேர்ந்துடுங்க. இல்லாட்டி நானே கலைச்சிருவேன் என்று இரு அணி தலைவர்களையும் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: திகார் சிறையில் இருந்து வந்த உடனேயே தனது அதிரடியை ஆரம்பித்து விட்டார் டிடிவி தினகரன். வந்த உடனேயே முதல்வர் ஈபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் போன் போட்டு எச்சரித்துள்ளாராம்.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கூடிய அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் பேட்டி அளித்த ஜெயக்குமார், தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு எதுவும் இல்லாமல் சுதந்திரமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி தலைமையில் செயல்படுவோம்.டிடிவி தினகரனிடம் இனியும் எந்த தொடர்பும் யாரும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம் என்றார்.
தினகரன் கட்டளை
இதற்கு காரணமே டிடிவி தினகரன் போட்ட கட்டளைதானாம். மணியான அமைச்சர்களை உடனே நீக்குங்க. நான் சொல்ற ஆட்களை அமைச்சராக்குங்க. என்னோட கண்ட்ரோல்ல எல்லாரும் வாங்க என்று சென்னை திரும்பிய உடனேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு போன் போட்டு பேசியதே அமைச்சர்களின் அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்கின்றனர்.
அதிகாரம் இல்லை
ஜெயக்குமாரின் பேட்டியை பெங்களூரில் இருந்து பார்த்த தினகரன், அதிகம் நக்கலடித்து பேசினார். மாண்புமிகு அமைச்சர் என்று கூறியதோடு அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்றார்.
என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஜெயக்குமாருக்கோ, அமைச்சர்களுக்கோ இல்லை. பொதுச்செயலாளர் சசிகலாவுக்குத்தான் உள்ளது.
60 நாட்கள் கெடு
60 நாட்கள் காத்திருந்து கட்சியை கண்காணிக்க முடிவு செய்துள்ளேன். அதற்குள் இரு அணிகளும் இணைகிறார்களா என்று பார்ப்போம். இல்லாவிட்டால் தீவிரமாக கட்சிப் பணியில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். பெங்களூரு செல்லும் முன்பாக ஓபிஎஸ் இடம் பேசிவிட்டுதான் சென்றாராம் தினகரன்.
கேட்க தயாராக இல்லை
போயஸ் கார்டன் உறவுகளின் கட்டளைக்கு எல்லாம் அடிபணியத் தேவையில்லை என்று அமைச்சர்கள் கொடுத்த தைரியத்தில்தான் தனது புகைப்படத்தை அமைச்சர்கள் அறையில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியை முதலில் கைப்பற்ற நினைக்கிறார் தினகரன். அதற்கும் கடிவாளம் போட தயாராகி விட்டனர் அமைச்சர்கள்.
தினகரனுக்கு திவாகரன் செக்
எடப்பாடி தலைமையிலான அணிக்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் சசிகலா குடும்பத்தில் நடக்கும் அரசியல் மோதல்தான் என்று அதிமுகவினர் பேசிக்கொள்கின்றனர்.
எம்எல்ஏக்களுடன் சந்திப்பு
நேற்று 8 மாவட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி இன்று 2வது நாளாக இன்று விருதுநகர், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்களை முதல்வர் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்.
ஆதரவாளர்களை அதிகரிக்க திட்டம்
ஒரு பக்கம் அணிகளை இணைய கெடு விதித்தாலும் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பலத்தை அதிகரித்து வருகிறார் தினகரன். ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவை நம்பி ஓட்டுப்போட்ட தொண்டர்களும், தமிழக மக்களும்தான் இன்றைக்கு தலைவிதியை நொந்து கொண்டிருக்கின்றனர்.
2019வரை ஆட்சி கலையாது
எப்படியோ இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஆட்சி கலையாது என்றே பேசிக்கொள்கின்றனர். லோக்சபா தேர்தலுடன்தான் சட்டசபை தேர்தல் நடைபெறும், அதுவரை மக்களிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு டிடிவி தினகரன் விட வேண்டுமே?