அதிமுகவை ஒப்படைக்க எடப்பாடிக்கு தினகரன் கெடு.. இல்லாவிட்டால் ஆட்சி கவிழ்ப்பு உறுதி என மிரட்டல்!
அதிமுகவை தம்மிடம் ஒப்படைக்காவிட்டால் ஆட்சி கவிழ்வது உறுதி என தினகரன் தரப்பு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவை தம் வசம் ஒப்படைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் கெடு விதித்துள்ளதாகவும் அப்படி செய்யாவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பது உறுதி எனவும் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி, அ.தி.மு.க பொருளாளர் என சில பதவிகளைப் பெற்றவர் டி.டி.வி.தினகரன். ஜெயலலிதாவின் கோபத்தை உணர்ந்து நழுவல் அரசியல் செய்ததால், சசிகலாவின் மற்ற குடும்ப உறுப்பினர்களைப் போல கைது நடவடிக்கைக்கு அவர் ஆளானதில்லை.
அவர் மீதான பெரா வழக்குகள் அனைத்தும் அவராகத் தேடிக் கொண்டதுதான். அதிமுக நிர்வாகிகள் மத்தியில், 'ஜென்டில்மேன்' என்ற அடைமொழியை ஏற்படுத்திக் கொண்டார் தினகரன்.
தினகரன் எதிர்பார்ப்பு
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில்தான் வெளி உலகில் தலைகாட்டத் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டபோது துணைப் பொதுச் செயலாளர் பதவியை எதிர்பார்த்தார்.
தலைவராக...
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபோது, கட்சி அதிகாரத்தையும் தன்னிடமே வைத்துக் கொண்டார். அதன்பிறகு தன்னை ஒரு தலைவராக உருமாற்றும் வேலைகளில் ஆர்வம் செலுத்தினார் தினகரன்.
தினகரன் கைது
ஆர்.கே.நகர் தேர்தல் களம் அதற்கு வழி அமைத்துக் கொடுத்தது. எப்படியும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெல்வார் எனக் அதிமுக நிர்வாகிகளே பேசும் அளவுக்கு, பணத்தை வைத்து விளையாட்டு காட்டினார். இதனை ரசிக்காத டெல்லி பா.ஜ.க, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கில் தினகரனைக் கைது செய்தது.
எம்.எல்.ஏ.க்கள் வளைப்பு
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் சில காலம் ஒதுங்கியிருந்தார் தினகரன். அது சாத்தியப்படாததால் தற்போது எம்.எல்.ஏக்களைத் திரட்டி பலத்தைக் காட்டினார். எதற்காக இப்படிச் செய்கிறார்? என எடப்பாடி தரப்பு இன்னமும் உணரவில்லையாம்.
எடப்பாடிக்கு கெடு
தினகரன் தரப்பை பொறுத்தவரையில் முதலில் அதிமுகவை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காமல் போனால் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களைக் கொண்டே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் முடிவில் இருக்கிறார். இதைத்தான் எடப்பாடிக்கு கெடு விதித்து சொல்லி அனுப்பியிருக்கிறாராம் தினகரன்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
எடப்பாடியோ டெல்லி இருக்கும் வரையில் எங்களுக்கு கவலை இல்லை என தெம்பாக இருக்கிறாராம். தினகரனோ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாள் பார்த்து கொண்டிருக்கிறாராம்.