ரோட்டுக் கடையில் பல்லி விழுந்த பனியாரம் சாப்பிட்ட 35 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பல்லி விழுந்த மாவில் செய்த பனியாரத்தைச் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள சின்னமுளையூரில் தெருவோர இட்லிக் கடை நடத்தி வருபவர் சோலையம்மாள். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் இட்லி, பனியாரம், ஆப்பம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
அதன்படி, இன்று காலை சோலையம்மாள் விற்ற பனியாரம் ஒன்றில் பல்லியின் இறந்த பாகம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக சோலையம்மாளிடம் தகவல் தெரிவிக்கப் பட்டது. சிறிது நேரத்திலேயே சோலையம்மாள் விற்ற பனியாரத்தில் பல்லி கிடந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.
இதற்கிடையே, சோலையம்மாளிடம் பனியாரம் மற்றும் இட்லி வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பெருமளவில் பள்ளிக்கு சென்று இருந்தனர். இதனால், பதறிப் போன அக்குழந்தைகளின் பெற்றோர், விரைந்து சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
பெற்றோர் வருவதற்கு முன்னதாகவே சில மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், மேயர் மருதராஜ், நகர செயலாளர் பாரதிமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று, குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் நலம் விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படியும் டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பல்லி விழுந்த மாவில் செய்த பலகாரங்களைச் சாப்பிட்டு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.