திண்டுக்கல் மேயர் மருதராஜின் மகன், மகள், தம்பி மருமகளுக்கு சீட்.... கொந்தளித்த கவுன்சிலர்!
திண்டுக்கல்: உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மேயர் மருதராஜ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் தமது மகன், மகள் மற்றும் தம்பி மருமகளுக்கு சீட் வாங்கிவிட்டார் மருதராஜ். இது திண்டுக்கல் அதிமுகவினரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் வெளியானது முதலே பல இடங்களில் வேட்பாளர் கனவில் இருந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லிலும் 2 முறை வென்ற 1-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, ஆதரவாளர்களுடன் போராட்டத்தை நடத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மேயர் மருதராஜ் தமது மகள், மகன், தம்பி மருமகள் ஆகியோரை வேட்பாளர்களாக்கியுள்ளார். தன்னைத் தவிர தனது குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வாங்கியிருக்கார்.
1வது வார்டில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் எனக்கு சீட் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய நிலை வரும் என்றார்.
திண்டுக்கல் 8-வது வார்டில் மேயர் மருதராஜின் மகன் பிரேம் என்ற வீரமார்பன், 10-வது வார்டில் மகள் பொன்முத்து, 6-வது வார்டில் சகோதரரின் மருமகள் நந்தினிதேவி ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.