சாலை விபத்தில் இறந்ததாக 4-வது முறையாக வதந்தி.. திண்டுக்கல் லியோனி கண்டனம்
சென்னை: தமது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் தாம் இறந்ததாக 4 முறை வதந்திகளை பரப்பிவிட்டனர் என்று திமுகவைச் சேர்ந்த நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை பட்டிமன்றங்களில் கொடி கட்டிப் பறந்த திண்டுக்கல் லியோனி திமுகவில் இணைந்தார். தற்போது அரசியல் மேடைகளில் கடுமையாக ஆளும் கட்சியை சாடி வருகிறார்.
இதற்கு எதிர்வினையாக அவர் இறந்துபோய்விட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரப்பப்படுவதும் லியோனி இதற்கு விளக்கம் சொல்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
புதுக்கோட்டையில் நடந்த சாலை விபத்தில் லியோனி இறந்துவிட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து கருத்து தெரிவித்த லியோனி, இந்த வதந்தியை பார்த்து எனது ரசிகர்கள் 500 பேருக்கு மேல் என்னை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் விசாரித்தார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி. நான் நலமுடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே 3 முறை இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டது. பலமுறை விளக்கம் கொடுத்தேன். ஒருமுறை 10 நாள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசியல் கூட்டங்களில் பேசுவதினால், என்னுடைய பேச்சை எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்ற ஒரு கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். கருத்து சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் பெரிய பங்கமாக இருக்கிறது. இதுபோன்றவை இனி தொடரக் கூடாது என்றார்.