கல்விக் கட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை சிறை வைத்த திண்டுக்கல் பள்ளிக்கூடம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கல்வி கட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை சிறை வைத்த பள்ளி நிர்வாகத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை நேற்று மாலை பள்ளி முடிந்ததும் கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்தால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பாமல் வகுப்பறையில் சிறை வைத்தது.
பள்ளி முடிந்து, நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை ஏற்றி வரும் ஆட்டோ டிரைவர்களை விசாரித்த போது கல்விகட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை பிடித்து வைத்திருப்பதாக தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், விரைந்து வந்து குழந்தைகளை விடுவித்தார்.
அவரிடம் பெற்றோர்கள் தங்கள் சூழ்நிலையை விளக்கி கூறினர். கல்வி கட்டணத்திற்காக குழந்தைகளை சிறைபிடித்த பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.