எம்ஜிஆர் என் உயிர்... அவரை பற்றி நான் அப்படி சொல்வேனா... அலறும் அமைச்சர் சீனிவாசன்
எம்ஜிஆர் பற்றி நான் சொன்னதை தவறாக மீடியாக்களில் போட்டு விட்டார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர பக்தன் நான்... எம்ஜிஆர் பற்றி நான் சொன்னதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன் கூறியுள்ளார்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட உள்ளது. ஜூன் 30 ஆம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆரம்பவிழா வரும் 30ஆம் தேதி மதுரையில் துவங்குகிறது.
விழாவிற்கான அடிக்கல் நாட்டுவிழா மதுரையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், 'எம்.ஜி.ஆர் நுாற்றாண்டுவிழாவுக்கு வெளிமாநில முதல்வர்கள், தலைவர்களை அழைக்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்டனர்.
திண்டுக்கல் சீனிவாசன்
அதற்கு பதிலளித்த அமைச்சர் சீனிவாசன் தமிழகத்தை தவிர்த்து எம்ஜிஆரை யாருக்குத் தெரியும். அதனால் அழைக்கும் திட்டம் இல்லை என கூறியதாக செய்தி வெளியாவே அ.தி.மு.க தொண்டர்கள், எம்.ஜி.ஆரின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பதவி விலக வேண்டும்
ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன், சீனிவாசனின் பேச்சைக் கண்டித்ததோடு எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவித்த அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பேட்டியளித்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு
எம்.ஜி.ஆர் குறித்த தனது பேச்சை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன். அதில், மதுரையில், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவிற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் 'விழாவிற்கு யாரையெல்லாம் அழைப்பீர்கள்?' என, பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டனர். 'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்கு, அவரோடு இருந்தவர்களையும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களையும் அழைப்போம்.
உயிருக்கும் மேலாக
அவரைப் பற்றி அறியாதவர்களை, அழைக்க வேண்டுமா' என்ற அர்த்தத்தில் நான் கருத்து தெரிவித்தேன். அதை, ஊடகங்கள், தவறாக வெளியிட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இரண்டு தலைவர்களையும், உயிருக்கும் மேலாக நேசித்து வருகிறேன்.
தீவிர பக்தன்
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர பக்தன் நான், இரண்டு தலைவர்களையும் என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். இருவரையும் என்று சிறுவயதில் இருந்தே இதய தெய்வமாக இதயத்தில் வைத்து பூஜை செய்து வருகிறேன் நான் என்பதை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் அறிவார்கள்.
தவறான செய்தி
எம்ஜிஆர் பற்றி நான் சொன்னதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை கட்சி வட்டாரத்தில் அமைதியை ஏற்படுத்தினாலும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மன்ற அமைப்புகள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிரான போராட தயாராகி வருகிறார்களாம்.
போஸ்டர் கிழிப்பு
இதற்கு முன்னோட்டமாகவே திண்டுக்கல் நகரில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் சீனிவாசனின் போஸ்டர்களை கிழித்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எம்ஜிஆரையே யாருக்கும் தெரியாது என்று சொல்லலாமா என்று கேட்கின்றனர் அவரது ரசிகர்கள்... எப்படி சமாளிக்கப் போகிறாரோ அமைச்சர்?