ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சையளிக்காமல் மரணமடைய வைத்தனர்: அமைச்சர் பகீர் பேச்சு
திண்டுக்கல்: ஜெயலலிதாவை மரணமடையச் செய்துவிட்டனர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் அததிமுக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் மேயர் மருதராஜ் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:
ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தபோது, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் அவர்களும் ஜெயலலிதாவை அருகே சென்று பார்க்க முடியவில்லை.
பார்க்கவிடவில்லை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரும் அருகே சென்று பார்க்க முடியவில்லை. யாராவது அருகே சென்று பார்த்தால் நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என கூறிவிட்டனர். 75 நாட்களாக வார்டு பாய், நர்ஸ், டாக்டர்கள், அத்தனை பேரும் போய் பார்த்துள்ளனர். மற்றவர்கள் போய் பார்த்தாலல் நோய் தொற்று ஏற்படும் என்று கதை சொல்லி வந்தனர்.
உண்மை வெளியாகிவிடும்
உண்மை என்னவென்றால், யாராவது 'அம்மாவிடம்' கிடைத்தால், அவர்களிடம் உண்மை பேசிவிடுவார் என்று சொல்லித்தான், அந்த தெய்வத்தை யாரும் பார்க்காமல் கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கு வந்துள்ளது. இதுதான் உண்மை.
மருந்து இருந்திருக்கும்
ஒரு நோய்க்கு மருந்து வேண்டுமென்றால் உலகின் எந்த மூலையில் இருந்தும் கொடுப்பதற்கு, அரசு மூலமும், தொண்டர்கள் மூலமும் வாய்ப்பு இருந்தது. ஆனால் நோய் முற்றற்றும், இயற்கையாக சாவதை போல சாகட்டும் என்று அவர்கள் திட்டமிட்டது தெரியவருகிறது. எனவேதான் அந்த குடும்பத்தையே அதிமுகவிலிருந்து விலக்கிவிட்டோம். சிறிதுநாள் தினகரனோடு இணைந்து இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சதி செய்த தினகரன்
இப்போது எப்படி கொள்ளையடித்த பணத்தை வைத்து ஆட்சியை மாற்றிவிடலாம் என்று கொக்கரிக்கிறார்களோ அதேபோல ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று, எம்எல்ஏ ஆனதும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில் தினகரன் இருந்ததை புரிந்து கொண்டோம்.
திமுகவுடன் சேர்ந்துள்ளார்
19 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளதாக கூறும் தினகரன், தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் எங்களிடம் பேசுகின்றனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.