ஆர்கே நகரில் அடுத்த அஸ்திரம் ஏவும் தினகரன் - திமுக மாஜி அமைச்சர்களுக்கு வலை!
ஆர்கே நகரில் முகாமிட்டுள்ள திமுக மாஜி அமைச்சர்களையும் வளைத்துப் போடுவதில் தினகரன் தரப்பு படுமும்முரமாக இருக்கிறதாம்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் எத்தனை அவலங்களை அரங்கேற்ற முடியுமோ அத்தனையையும் செய்து வருகிறது தினகரன் கோஷ்டி. இப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திமுக மாஜி அமைச்சர்களுக்கும் வலை விரிக்கப்படுகிறதாம்.
ஆர்கே நகரில் வரலாறு பேசும் என்கிற அளவுக்கு பணம், பரிசு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையையும் விநியோகிக்கிறது தினகரன் கோஷ்டி. அரசு வழக்கறிஞரே பணப்பட்டுவாடா செய்தபோது சிக்கிய அசிங்கமும் நடந்திருக்கிறது.
நினைத்து பார்க்க முடியாத வகைகளில்..
யாரும் கணிக்க முடியாத ரூட்டுகளில் எல்லாம் கூட தினகரன் கோஷ்டி பணப்பட்டுவாடா செய்கிறது, இது தொடர்பாக அத்தனை எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தும் சத்தியமா நான் அவன் இல்லை என்கிற ரீதியில் பதிலளிக்கிறது தினகரன் கோஷ்டி.
திமுக நிர்வாகிகளுக்கு குறி
ஏற்கனவே வைட்டமின் ப சப்ளை செய்யாததால் அதிருப்தியில் இருந்த திமுக நிர்வாகிகளை வளைத்துப் போடுவதில் அதி தீவிரம் காட்டியது தினகரன் கோஷ்டி. இப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் மாஜி திமுக அமைச்சர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.
மாஜி அமைச்சர்களுக்கு வலை
தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலர், திமுக மாஜி அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். 'நீங்க சைலண்ட்டாக இருந்தாலே போதும்... உங்க கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிலுக்கு அரசு தரப்பில் உதவிக்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்பதுதான் வாக்குறுதியாம்.
க்ரீன் சிக்னல் கிடைக்குதாம்
என்னதான் திமுகவில் இருந்தாலும் பிசினஸில் பிசியாக இருக்கும் இந்த மாஜி அமைச்சர்களும் எதிர்கால ஆதாயம் கருதி, ஓ அப்படியா! என க்ரீன் சிக்னல் கொடுத்து வருகிறார்களாம். இதனால் தினகரன் தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.