உற்பத்தி குறைவால் தேங்காய் விலை கடும் சரிவு: கவலையில் விவசாயிகள்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு தேங்காய் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 கிலோ தேங்காய் ரூ.28 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக தேங்காயின் விலை சரிந்து வந்தது. தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.16-க்கு விற்கப்படுகிறது. படிப்படியாக தேங்காயின் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். வடசேரி மற்றும் அப்டா மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.17க்கு விற்கப்பட்டது.
இது பற்றி விவசாயி ஒருவர் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருகிறது. தேங்காய் உற்பத்தியை பெருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். வழக்கமாக ஆனி, ஆடி மாதங்களில் தேங்காயின் உற்பத்தி குறைவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேங்காயின் விலையும் குறைவாக இருப்பதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.