நம்பினால் நம்புங்கள்... கடை திறப்பு நேரத்தில் "கட்"டிங் போட்டதால் மது விற்பனை 6% குறைஞ்சிருச்சாம்!
சென்னை: மதுக் கடைகளைத் திறக்கும் நேரத்தைக் குறைத்ததால் மது விற்பனையில் 6 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா மீண்டும் வந்ததும் மது விலக்கு தொடர்பான இரண்டு நடவடிக்கைகளை அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் 500 மதுக் கடைகள் மூடப்படும், மதுக் கடைகள் திறப்பு நேரம் காலை 10 மணிக்குப் பதில் 12 ஆக மாற்றப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதில் மதுக் கடை திறப்பு நேர மாற்றம் அமலுக்கு வந்து விட்டது. 500 கடைகள் மூடல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மதுக் கடை திறப்பு நேரத்தை மாற்றியமைத்ததால், மது விற்பனையில் 6 சதவீத அளவுக்கு வீ்ழ்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறுகையில், மது விற்பனை நேரத்தைக் குறைத்ததால் மொத்த விற்பனையில் 5 முதல் 6 சதவீதம் மது விற்பனை குறைந்திருக்கிறது. ஆனாலும் மொத்த மதுக்கொள்முதலில் மாற்றம் இருக்குமா என்பதை இனிமேல்தான் கணக்கிடவேண்டும்.
தற்போது 500 மதுக்கடைகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். எந்தக் கடைகளுக்கெல்லாம் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறார்களோ அவற்றை மூட முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மதுக் கடைகள் செயல்படும் நேரத்தை இன்னும் வெகுவாக குறைத்து மதுக் கடைகளில் விற்பனை அடியோடு சரிந்தது என்ற நல்ல செய்தியை நாட்டுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் என்று "குடி(க்காத) மக்கள்" ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.