செக் மோசடி வழக்கு: சிவகாசி கோர்ட்டில் மகளுடன் ஆஜரானார் இயக்குனர் சேரன்
சிவகாசி: செக் மோசடி வழக்கில் நடிகரும் இயக்குநருமான சேரன், தனது மகள் நிவேதா பிரியதர்ஷினியுடன் இன்று சிவகாசி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில், திரைப்படத்தின் போஸ்டர்கள் அச்சடித்ததற்காக, இயக்குநர் சேரனும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினியும் தனித்தனியாக முறையே ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளனர்.
வங்கியில் பணம் இல்லாததால் அந்த இரண்டு காசோலைகள் திரும்பிவந்து விட்டதாம். வேலை முடித்துக்கொடுத்தும் இன்னும் அச்சகத்திற்கான பணத்தை சேரன் கொடுக்கவில்லை.
அச்சகத்தை சேர்ந்தவர் பலமுறை சேரனிடம் பணம் கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அச்சக நிறுவனம் சார்பில் சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சேரன் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைக்காக சிவகாசி நீதிமன்றத்தில் சேரனும் அவரது மகளும் இன்று ஆஜராகினர். இருவரும் பணத்தை தருவதற்கு கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.