ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை: தீபா
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் தமது பேரவை இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் செயலாளரும், பொருளாளருமான தீபா தெரிவித்தார்.
சசிகலா சட்டசபைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தியானம் செய்தார்.
பின்னர் சில தினங்கள் கழித்து செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டற்கிணங்க தம்முடன் இணைந்து செயல்படும்படி தீபாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார்.
ஜெ.சமாதியில் சந்திப்பு
பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தன் ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது அங்கு தீபாவும் வந்திருந்தார்.
ஆரத்தி வரவேற்பு
சசிகலாவுக்கு எதிராக கிடைத்த தீர்ப்பால் ஜனநாயகம் வென்றுள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து இருகரங்களாக செயல்படவுள்ளதாக தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் இருதரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மெரினா வந்திருந்த தீபாவை தன் இல்லத்துக்கு அழைத்து சென்றார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது தீபாவுக்கு அவரது மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
மரியாதை நிமித்தமானது
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர் செல்வத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தீபா கலந்து கொள்ளபோவதில்லை என்றும், அவரவர் வழியில் செயல்படுவது நல்லது என்றும் கூறியிருந்தார்.
தீபாவுக்கு மீண்டும் அழைப்பு
உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்டாலும் தமது பேரவையும் போட்டியிடும் என்றும் ஓ.பன்னீர் செல்வத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் தெரிவித்திருந்தார். அன்றைய தினமே ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், தீபா மீண்டும் வரவேற்பதாக தெரிவித்தார்.
ஆலோசனை
இந்த நிலையில் இன்று தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் தமது பேரவையும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். எனது அரசியல் பணயம் தொடங்கியது என்பதற்கான அறிகுறியே இந்த தீபா பேரவை என்றார்.