சபாநாயகர் உத்தரவை நீதிமன்றம் ஏற்குமா? சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன தெரியுமா?
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகுமா, இல்லையா என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
18 எம்.எல்.ஏக்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ், சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆனால் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து 18 பேரும் சென்னை ஹைகோர்ட்டுக்கு போயுள்ளனர்.
எனவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் பார்வை
இதுகுறித்து சட்டவல்லுநர்களுடன் பேசினோம். அப்போது அவர்கள் கூறிய கருத்துக்களை வைத்து பார்த்தால், 18 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட தகுதி இழப்பு நடவடிக்கை சட்டத்தின் முன்பு செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
கட்சி தாவல் தடை சட்டம்
அதிருப்தியை வெளிப்படுத்துவதாலேயே எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். விப் உத்தரவை மீறி செயல்பட்டால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சட்டசபைக்குள்தான் எப்படி செயல்பட வேண்டும் என்று விப் உத்தரவு பிறப்பிக்க முடியும். வெளியே அதிருப்தியை வெளிப்படுத்த கூடாது என கொறடா கூற முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
சபாநாயகர் வாதம்
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறுவது எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை விட்டுத்தருவதற்கு சமமானது, எனவே எனக்கு வேறு வழியில்லை, இந்த நடவடிக்கையைதான் எடுக்க வேண்டி வந்தது என்று சபாநாயகர் தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கலாம். வேறு எந்த பதிலும் வழங்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
காலம் கடத்தலாம்
ஏற்கனவே எடியூரப்பா ஆட்சி காலத்தில் நடைபெற்ற இதுபோன்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என கூறியுள்ளது. அதேபோலத்தான், இந்த வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எம்எல்ஏக்கள் விவகாரத்தில் காலதாமதம் செய்யவே இந்த நடவடிக்கை உதவும் என்பதுதான் ஆளும் கட்சி எதிர்பார்ப்பாக இருக்க கூடும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.