ஸ்....மிடியலையேப்பா... அதிமுகவுக்கு இளவரசி மகன் விவேக் தலைமை ஏற்கனுமாம்!
சென்னை: அப்பாடா! அதிமுகவில் இருந்து சசிகலா கோஷ்டி ஓடிப் போய்விட்டது என அக்கட்சியின் அப்பாவி தொண்டர்கள் மட்டுமே நினைக்கலாம்.. இதோ அதிமுகவை ஆட்டையப் போடப் போவது திவாகரன் மகனா? இளவரசி மகனா என்கிற புதிய அக்கப்போர் சமூக வலைதளங்களில் பெரும்கூத்தாகவே நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுகவை சசிகலாவும் அவரது சொந்தங்களும் ஆக்கிரமித்துக் கொண்டு செய்த அட்டூழியங்கள் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் கருப்பு பக்கங்களே.. அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவும் அவரது குடும்பமும் போடும் ஆட்டங்கள் சொல்லி மாளாதவை.
சசிகலா இப்போது சிறைக்குப் போய்விட்டார்.. அதிமுகவையும் ஆட்சியையும் விழுங்க நினைத்த தினகரனின் குடுமியோ டெல்லியின் பிடியில்... தங்களை ஒதுக்கிய தினகரனுக்கு நேர்ந்துள்ள சிக்கலை சசிகலாவின் தம்பி திவாகரன் குடும்பமே குதூகலித்து கொண்டாடி வருகிறது.
அடுத்த வாரிசுகள்
இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சசிகலா குடும்பத்து அடுத்த வாரிசுகள் அதிமுகவை ஆட்டைய போட துடிக்கின்றன. திவாகரன் மகன் ஜெயானந்தும் இளவரசி மகன் விவேக்கும் சமூக வலைதளங்களில் தங்களுக்கென ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டு இது தொடர்பான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
விவேகமான முடிவாம்
திவாகரன் மகன் ஜெயானந்த், தினகரன் நீக்கம் என்பது விவேகமான முடிவு; அதிமுகவை மீட்பதற்கான ஒரு கசப்பு மருந்து என வர்ணித்துள்ளார். ஆனால் இளவரசி மகன் விவேக், அண்ணா திமுகவை சுக்கு நூறாக இது சிதைத்துவிடும் என ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறார்.
ஜெயானந்தா, விவேக்கா?
இந்த பஞ்சாயத்துக்களுக்கு மத்தியில் ஜெயானந்த் தலைமையை ஏற்போம்; அவர் எதிர்காலத்தில் தலைவராக உருவாக இதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என 'கூவும்' கோஷங்களும் நிறையவே இருக்கிறது.
இளவரசி மகன்
இதில் உச்சகட்டமாக இளவரசி மகன் விவேக், ஜெயலலிதாவால் ஆறு மாத குழந்தையில் இருந்தே வளர்க்கப்பட்டவர்.. தம்பி உங்கள் தலைமையை ஏற்கிறோம் என ஓவராக கூவும் பதிவுகளும் அதில் இடம்பெற்றுள்ளன.