சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்.. சசிகலா தம்பி திவாகரன் திடீர் பேச்சு!
அதிமுக அரசைக் காப்பாற்ற சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று சசிகலா தம்பி திவாகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இல்லாமல் சபாநாயகர் தனபாலை முதல்வராக நியமித்தால் இந்த ஆட்சி நீடிக்கும் என்று சசிகலா தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கைகள், பதவிகள் பகிர்ந்தளிப்பு என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய அரசியல் சூழலில் ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ இல்லாத ஆட்சி அமைவது தான் நல்லது. எனவே சபாநாயகர் தனபாலை முதல்வராக நியமித்தால் இந்த ஆட்சி நீடிக்கும்.
அமைச்சரவையில் இடங்களை அளிப்பதற்கு முன்னர் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது. தமிழகத்திற்கென தனி ஆளுநர் நியமிக்கப்படாமல், பொறுப்பு ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதாலேயே அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கின்றன. தற்போதைய சூழலில் தினகரனுக்கு மேலும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றும் திவாகரன் கூறியுள்ளார்.