‘கக்கூஸ்’ திவ்ய பாரதிக்கு சமூக வலைத்தளங்களில் ஆபாச வசை.. கொலை மிரட்டல்கள்.. தொடரும் அவலம்
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதிக்கு சமூக வலைத்தளங்களிலும் போன் கால் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமாக வசைபாடித் தீர்க்கும் கொடுமை நடந்து கொண்டே இருக்கிறது.
சென்னை: கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கிய திவ்ய பாரதிக்கு தொடர்ந்து ஆபாச போன்கால்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், கொலை மிரட்டல்களும் தொடர்கின்றன.
கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக ஆர்வலர் திவ்யபாரதி அண்மையில் இயக்கி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் ஆஜராகாமல் இருந்ததால் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், திவ்ய பாரதிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் தொலைப்பேசியிலும், வாட்ஸ் அப்பிலும் வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இந்து மக்கள் கட்சியினர் மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த இந்தச் செயலில் ஈடுபடுவதாக திவ்ய பாரதி நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
கொலை மிரட்டல் போன்றே, மிகவும் ஆபாசமாக அவரைத் திட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடுவதும் தொடர்ந்து வருகிறது. இது குறித்து தனது வேதனையை பேஸ்புக் பக்கத்தில் "இப்படித் திட்டமிட்ட வக்கிர தாக்குதலை சமூக வலைத்தளத்திலும், போன் செய்தும் ஒருவர் மீது, பொதுச் சமூகம் பார்த்துக் கொண்டிருக்க பட்டவர்த்தனமாக நிகழ்த்தலாம் அல்லவா...?" என்று திவ்ய பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனக்கு எந்தெந்த செல்போன் எண்ணில் இருந்து மிரட்டல் மற்றும் ஆபாச போன்கால்கள் வருகிறதோ அவற்றை ஸ்கிரின் ஷாட் எடுத்து பேஸ்புக் பதிவிட்டுள்ளார் திவ்ய பாரதி.
பெண்கள் சமூக செயல்பாட்டுத் தளத்திற்கு வருதே அரிது. அப்படியே வந்தாலும், கைது, குண்டர் சட்டம் என்று அதிகாரத்தை வைத்து மிரட்டி, வீட்டிற்குள் மீண்டும் அனுப்பும் முயற்சியை அரசு செய்து வருகிறது. சமூகத்தில் சக மனிதர்களாய் வாழ்பவர்கள் சமூக வலைத்தளங்களிலும், போன் மூலமும் ஆபாசமாக வசைகளைப் பேசி, கொலை மிரட்டல் செய்வது என்ன லாபம் பார்க்கப் போகிறார்கள்?