மக்கள் முதல்வர் மக்களைச் சந்தித்தாரா?: கிருஸ்துமஸ் விழாவில் கேட்ட விஜயகாந்த்
சென்னை: மக்களையே சந்திக்காத முதல்வர் எப்படி மக்கள் முதல்வராக முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த, சமூக நீதி இயக்கத் தலைவர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
சிறுபான்மை மக்களை காப்பாற்றுவதாக கூறி ஏராளமானோர் ஏமாற்றுகின்றனர். அதைக் கேட்டு ஏமாந்து விடவேண்டாம் என்றார். நான் கிருஸ்துவ பள்ளிகளில்தான் படித்தேன் என்று கூறிய விஜயகாந்த், அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சாலைகள் மோசம்
தொடர்ந்து பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் உள்ள 19,000 கிலோமீட்டர் நீள சாலைகளை மேம்படுத்த 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிதி போதாது என்றும், தமிழகத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
கொசு ஒழிப்பு
மாநகராட்சியின் கொசு ஒழிப்புத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் , இத்திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்குதல், நொச்சிச் செடிகள் வாங்குதல் உள்ளிட்ட பணிகள் எதுவுமே நடக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
டாஸ்மாக் மட்டும் லாபம்
பால் விலையேற்றம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகள் இருக்க டாஸ்மாக் கடைகள் மட்டும் எந்த வித இழப்புமின்றி செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
யார் மக்கள் முதல்வர்
எல்லோரும் மக்கள் முதல்வர், மக்கள் முதல்வர் என்கிறார்கள் அவர் மக்களை சந்தித்தாரா என்றும் கேட்டார் விஜயகாந்த்.
கேக், பிரியாணி
தேமுதிக கொண்டாடிய கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்றவர்களுக்கு சுடச்சுட பிரியாணியும், கேக்கும் பரிமாறப்பட்டது.