காழ்ப்புணர்ச்சி அரசியலில் இருந்து மீண்டு வருவோம்... பிறந்த நாளில் சூளுரைக்கும் விஜயகாந்த்
சென்னை: அரசியல் ரீதியாக தொடரப்படும் வழக்குகள், மற்றும் காழ்ப்புணர்வு அரசியலை எதிர் கொண்டு மீண்டு வருவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்த நாளில் சூளுரைத்துள்ளார்.
நேற்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக என் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. என்னாலும் தேமுதிகவினாலும் முடிந்ததை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வருகிறோம். வறுமையை ஒழிப்பதே எங்களது குறிக்கோள்.
அந்த வகையில் முதியோர் உதவி, இலவச கணினி பயிற்சி, சுயதொழில் உதவி, மாணவ மாணவியருக்கு கல்வி உதவி என பல்வேறு நலத் திட்டங்கள் தேமுதிக சார்பில் ஏழை மக்களுக்கு வழக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தொடர்ந்து செய்வோம்.
அரசியல் என்பது பொது நலமாக இருக்க வேண்டும். எல்லா துறைகளிலும் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. லஞ்சம், ஊழல், வறுமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் தேமுதிக, அதனை உடைந்து மீண்டு வரும். அதே நேரத்தில் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்ட ஒழுங்கு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றிடுவோம்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.