பாஜக கூட்டணியில்தான் விஜயகாந்த் இருக்கிறார்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: பாஜக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில், தேமுதிகவின் நடவடிக்கைகளால் அக்கட்சி பாஜக கூட்டணியில் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் திட்டங்களால் இந்தியா வளர்ச்சி அடையும். அப்போது தமிழகமும் தலைசிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்பது அனைவரின் ஆசை.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். விஜயகாந்த் எங்கள் கூட்டணியில் தான் உள்ளார்' என்றார்.
மேலும், ‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைத்தான் கேட்கிறோம். இதை தர மறுப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்துக்கு தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரை தரவேண்டும். இதை ஆணையாக பிறப்பிக்கும் சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது' என அவர் தெரிவித்தார்.