மதுவிலக்கு கேட்டு கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி 6ம் தேதி, வியாழக்கிழமை, மாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை தேமுதிக சார்பில், கழகத் தலைவர், விஜயகாந்த் தலைமையிலும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையிலும், கோயம்பேடு முதல் கோட்டைவரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிமுக அரசு இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை. மதுவினால் இரண்டு தலைமுரைகள் பாதிக்கப்பட்டு, மூன்றாவது தலைமுறையும், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாய்மார்கள் பதறுகிறார்கள். மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, அனைத்து தரப்பினரும், ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகிறார்கள். ஆனால், அதிமுக அரசோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மது விற்பனையால் வரும் வருமானத்திற்காக ஏழை, எளிய நடுத்தர மக்களை மதுவுக்கு பலியாக்கி வருகிறது.
தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள சீரழிவை தடுத்து நிறுத்த, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வருகின்றன, 6ம் தேதி, வியாழக்கிழமை, மாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை தேமுதிக சார்பில், கழகத் தலைவர், விஜயகாந்த் தலைமையிலும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையிலும், கோயம்பேடு முதல் கோட்டைவரை மனித சங்கிலி போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறும்.
மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தாய்மார்களும் சகோதர சகோதரிகளும், இளைஞர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும், தொழிலாளர்களும், வர்த்தக நிறுவனத்தினர்களும், பொதுமக்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் என அனைவரும் பெருந்திரளாக வந்து, வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.